About Me

2019/06/23

விஸ்வரூபம்




கலைகள் - இனவாதக்
களைகளாய்  இங்கே!
அலைகின்றன வரவேற்புக் கோஷங்கள்............
அல்லாஹ்வுக் கஞ்சாதோரால்!

விஸ்வரூப எழுத்துக்களே
அரபெழுத்தணி சாயல்களாய்............
சரிதம் தொடர்கின்றன
கமலின் சாகஸங்களை!

தளிர்க் கரங்களில் துப்பாக்கி திணிக்கும்
பழிக் கூட்டங்களாய் எம்மவர்கள்.........
இன அழிப்பார்களின் கைக் கூலிகளாய்
உருதுலக்கப்படுகின்றதோ கலையுலகம்!

மறை ஓதி மாண்பு தரும் - நம்
இறைகூடங்களின் புனிதங்கள்.......
பறைசாட்டப்படுகின்றன தீவிரவாதக்
கறைகளின் பள்ளியறைகளாய்!

சாந்திமார்க்க விழுதுகளில்
காயம் தரும் கோடாரிகளிங்கே........
சாய்க்கின்றன மறை வேத நெறிகளை
மாற்றோரின் குதர்க்க வேட்டைக்காய்!

இறை வசனங்களின் உயிர் மூச்சுக்கள்
சொருகப்படும் சன்னங்களாம்.......
காவு கொள்ளப்படுகின்றது சன்மார்க்கமிங்கே
விஸ்வரூபத்தின் வசை பாடலில்!

இனத்துக்காய் குரல் கொடுப்போன்
போராளியென்றே அறிவிப்போரிங்கே.....
சுட்டு விரல் நீட்டுகின்றனர் அடுத்தவனுக்கு
தீவிரவாதி நீயென்று !

புரட்சிக்காய் புறப்பட்ட கமல் - துப்பாக்கி
ரவைகளின் அரக்கத்தனத்தில் தீனை முடிந்து..........
பரபரப்பாகின்றாரிங்கே - முஸ்லிம்
உம்மாக்களின் குருதி உறிஞ்சி!

விலைக்காய் கலை விற்கும்
சகலாகலாவல்லவனின் வில்லத்தனத்தில்......
இனவாதக் களையொன்று
நம்மையெல்லாம் கடந்து செல்கின்றது
விஸ்வரூபமாய்!

விஸ்வரூப  வில்லத்தனம் - தீனுல்
இஸ்லாம் குதறும் மூடத்தனம்............
திருமறையின் அருள்மொழியை
திமிரோடு உயிரறுக்கும் வில்லங்கம்!

இறை நிராகரிப்போர் கலையிது
இதை நிராகரித்தல் தவறில்லை!- நம்
மறை நிராகரிப்போர் தூவுமிந்த விதை கூட
கறைதான் எம் இனக் குலத்தவருக்கு!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!