About Me

Showing posts with label தீன் வழி. Show all posts
Showing posts with label தீன் வழி. Show all posts

2013/04/12

நற்சிந்தனைகள்


நபி மொழிகள்
---------------------------



மோதிரம் அணிதல்
-------------------------------
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆகி இருந்தது. அதன் மேல் குமிழும்  வெள்ளியால் ஆகி இருந்தது,
                                                                                                                 (புகாரி)

அப்துல்லாஹ் பின் ஜ பர் (ரலி) அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வலது கரத்தில் மோதிரம் அணிபவர்களாக இருந்தார்கள்.....
                                                                                                                (இப்னு மாஜா)

இந்த ஹதீஸ்கள் முஸ்லிம் ஆண்களின் வெள்ளி மோதிர அணிகைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது..
------------------------------------------------------------------------------------------------

உங்களில் ஒருவர் ஒரு சகோதரரைச் சந்தித்து அவரிடம் அமருவாரானால், அவரிடம் அனுமதி பெறும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வேண்டாம்,
                                                                                                                    (தைலமீ)
-----------------------------------------------------------------------------------------------



நபியவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். ஒட்டகம் பருகுவது போன்று (ஒரே மூச்சில்) பருகாதீர்கள்!எனினும் (இடையிடையே மூச்சு விட்டு) இரண்டு மூன்று விடுத்தமாகப் பருகுங்கள்! நீங்கள் பருகத் துவங்கினால், அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள்! நீங்கள் தண்ணீர்ப்பாத்திரத்தை நீக்கினால் (குடித்து முடித்து விட்டால் ,"அல்ஹம்துலில்லாஹ்" எனக் கூறி) அல்லாஹ்வைப் புகழுங்கள்!
                                                                                            (திர்மிதி , புகாரி, முஸ்லிம்)

-------------------------------------------------------------------------------------------------



ஒருவர் தும்மினால், மூன்று தும்மல்கள் வரை, அருகிலுள்ளவர் "யர்ஹமுக்கல்லாஹ்" என அவருக்கு பதில் அளிப்பது வாஜிப் படமை, அல்லது தும்மினால், பதில் அளிப்பதும், அளிக்காததும், அதனைக் கூறுபவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். எனினும் அப்பொழுதும் பதிலளிப்பது முஸ்தஹப் ஆகும்.
                                                      ( மிர்காத்)


2013/03/08

தீனின் ஒளியாய்



இப்ராஹீம் நபியவர்கள் இறைஞ்சுதல்கள்
இறை சந்நிதானத்தில் வலு சேர்க்கவே.........
ரபியுல் அவ்வல் பிறை பனிரெண்டில்
தரணிக்குள் தடம் பதித்தா ரெம் பெருமானார்!

பிரபஞ்ச இருள் வெளிக் கீற்றுக்களில்
பிரவேசித்த வைரமாய் எம் பெருமானார். ...........
நல்லறங்கள்  பல விட்டுச் சென்றார்- பல
உள்ளங்கள் இஸ்லாத்தைத் தொழவும் செய்தார்!

விண்ணகர் மலக்கொளிகள் வாழ்த்தி நிற்க
மண்ணக அறியாமை கறையகற்றி.........
தீன் வழிச் சுவட்டோரம் நடைபயின்றே
வாழ்ந்தும் காட்டினா ரெம் பெருமானார்!

அன்னை ஆமினா உதிரம் நனைந்தே
இன்முகம் காட்டும் நனி பூவானார் ............
தந்தை அப்துல் முத்தலிப் லயிப்பில் தான்
தரணிக்குள் தரித்தும் நின்றா ரெம் பெருமானார்!

அருந்தவப் புதல்வரா யன்னையவர்
கருவறை தங்கிய வெம் கோமகன்......
பெருந்தவப் பேறாய் பேருலகில் தீனைப் பரப்பி
பொக்கிஷமாய் திருமறையையும் தந்தே நின்றார் ........

அரபிச் சுவரோர அறியாமைப் படிவுகள்
குற்றங்களாய் மனித மனங்களில் நீட்சி பெற்றே...............
இன்னல்களாய்  தீப்பற்றி எரிகையில்..........
அன லுறிஞ்சும்  புனிதமுமானார்
அஹமதெனும் எம் பெருமானார்!

பாலையூற்றுக்களின் பாவக் கறைகள் நீங்கி
சோலைவெளிகளாய் இப்பிரபஞ்சம் நிரம்பிட...........
பிரவேசித்தா ரெம் பெருமானார்
பிரகாசித்தார் அரபுத் தேசம் சிறப்புப் பெற!

சமுதாயப் பேரேடுகளில் சாந்தி வரையும் 
சரித்திரமுமானார் பலர் தரித்திரங்களும் நீக்கி.......
சன்மார்க்க போதனைகளில் எம் சிந்தைகளை  நிறைத்திட
விட்டும் சென்றார் வழிமுறைகளாம் .....
அல்-ஹதீஸையும் ஸூன்னாவையும்!

விண்ணகம் இறக்கித் தந்த தீன்நெறியால்
இன்னல் களையும் வழியும் தந்தார்!
மண்ணக சேமிப்போரங்களெல்லாம்..........
எண்ணற்ற அருளையும் சேர்க்கச் செய்தார் -எம்
அண்ணல் நபியவர்கள்!

வானின் பௌர்ணமி எழிலொளியாய்
வையகத்தில் வந்திறங்கினார் எம் பெருமானார்!
நன்மையின் விளைவகம் நாமாக...........
தீனை உணர்விலும் தந்து நின்றார்!

கஷ்டங்கள் பல கண்டனுபவித்தும்
இஷ்டத்துடன் இறை தொழுதே நின்று........
இஸ்லாமெனும்  தூணில் உலகைப் பொருத்தி
பெருமையும் கண்டார் எம் பெருமானார்!

சாப வினைகள்  நீக்கத்தான்
சத்திய நெறிகள் போதிக்கத்தான்........
வந்துதித்தார் நித்திய வுலகின் அச்சாணியாய் - எம்
முகம்மது நபி (ஸல்) அவர்கள் !

வறுமை விரட்டும் மருந்துமானார்.........
சிறுமை களையும் அன்புமானார்..........
மறுமை வாழ்வுக்கும் வழியும் தந்தார்.........
இறுதித் தூதுவர் அவருமானார்!

மீலாத் தினமின்று பல மாண்புகளும்
மீட்சிகளும் இறையருளும் நாம் பெற்றிடவே .........
பெருமளவில் ஸலாம் சொல்வோம்- முகம்மத்
பெருமானார் திருமொழி நவின்றே












2012/08/17

எல்லோரும் கொண்டாடுவோம்


விண்முகட்டில் வீழ்ந்து கிடக்கும்
வெண்ணிலாக் கீறலொன்று
கார்க் கொன்றல் மிரட்டல் கண்டும்
சிரிக்கும் லேசாய் மெல்ல
ஷவ்வல் பிறையாகி!

நால் திங்கள் நடைபயில
நூலிடையாய் "ஷவ்வல்" எட்டிப்பார்க்க
வேலியிட்டுத் தடுத்த  உண்ணலும் பருகலும்
இறையாணையால் மீளெழுந்து எமை நோக்க
மறைந்துதான் போகும் நோன்பும்
மாண்பு பல தந்துவிட்டே!

நோன்புச்சாலை வழியோரம்
சிதறி வீழ்ந்த  நம் தவறு!
கதறியழுதே துடித்திடுகையில்!
எமைக் காக்கும் கேடயமாய்
தழுவிக் கிடக்கும் "பித்ர் தர்மம்"  !

உதரத் தசையீரங்களில்
உலர்ந்து கிடக்கும் ஆகாரங்களும்
தொண்டையோர வெளிதனில்
வற்றிக் கிடக்கும் நீர்ச்சுணைகளும்
மீண்டும் சிலிர்த்துத்தான் தளிர்த்திடவே
வந்துவிடும் "ஈதுல் பித்ர் "நம்மருகே!

வறுமை கொண்ட ஆத்மாக்கள்
உருக்குலைந்தே வீழ்ந்து கிடக்கையில்
வசந்தமாய் எம் "ஸதக்கத்துல் பித்ர்"  - அவர்க்கே
சுகந்தத்தை மெல்ல நெருடிக் கொடுக்க
பேதம் துறந்து புன்னகைக்க பெருநாளும்
வாசம் வீசி வந்திடுமே!

சாமம் கடந்து பொழுதும் புலர்ந்து
ஆதவன் மெல்ல வானேறுகையில்
தென்றலின் நலனோம்பலும்
முன்றல் வந்து எட்டிப் பார்க்க
வெட்ட வெளிகளும் மடி தந்திடும்
அல்லாஹ்வைத் துதித்திடும் பள்ளிகளாய்

நல்லமல்கள் செய்தோர் தம்
பேதமை துறந்து தக்பீர் முழக்கிட
வல்லோன் புகழ் வசனங்களில்
எல்லோர் வார்த்தைகளும்  உறைந்தே கிடந்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும்  சந்தன வாசம்!

"இரண்டு ரக்அத்தில்"  இறைவன் இறைஞ்சி
மறைவேதமாம் திருக்குர்ஆனுமோதி - நம்
மூச்சுக்காற்றிலே பரக்கத்தைச் சுமந்து
முழு வாழ்வுமே ஒளியினைப் பொருத்த
வந்திடும் பெருநாளும்
தந்திடும்  சந்தன வாசம் !

புத்தாடையும் பெருநாள் காசும்
புளாங்கிதமாயுண்ணும் பலகாரங்களும்
உறவுகளின் சந்தோஷிப்புக்களும்
இறைவனின் அருள் மணமும் - எம்
இல்லங்களை நிறைத்திடவே
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!!

ஈகைத் திருநாளில் கறையிடரகற்றி
உள்ளமதை உவப்பேற்றி
பாசத்துடன் எமைத் தரிப்போருக்கே
தேன் சுவை விருந்தும் பரிமாற
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!!

உறவுகளின் வாழ்த்துச் சரத்தில் - எம்
மனைகளும் பூத்துச்  செழித்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் - தன்
சிறப்பை தரணிக்குணர்த்தியே

என்னைச் சூழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நட்பினருக்கும் எனதினிய நோன்புப் பெருநாள் (முன்கூட்டிய) வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்

-Jancy Caffoor -

2012/08/16

விடைபெறும் ரமழானே !



என் சின்ன வயது நோன்பின் ஞாபகங்களினூடாக , யாழ்ப்பாணம் சோனகதெரு இப்பொழுது என் கண்முன்னால் எட்டிப்பார்க்கின்றது. நோன்பென்றாலே வசந்தத்தை வாசமாக்கி எம்முள் பரவச்செய்து நிற்கும் அந்த நாட்கள்....

சோனகதெருவில் வீதிக்கு வீதி பள்ளிவாசல்களுள்ளன. "ஸஹர்" பொழுதுகளில் பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபரப்பாகும் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் விசேட  ஒலிபரப்புக்களும் அறிவிப்புக்களும் இன்னும் மறக்கமுடியாமல் மனசுக்குள் மயங்கிக் கிடக்கின்றன. அது மாத்திரமில்ல இந்தியா நாகூரிலிருந்து வருகின்ற பக்கிரிசாக்கள் ஸஹர் பொழுதில் மேளம் தட்டி எம்மை எழுப்பி நிற்கும் அந்த நிகழ்வுகளும் என் சின்ன வயது நெஞ்சுக்குள் மகிழ்வோடு பதியப்பட்ட தருணங்கள்.............!

நோன்பு ........................!

இஸ்லாத்தின் உன்னதமான கடமைகளுள் ஒன்று. நாம் இறைவனுடன் ஆன்மீகத் தொடர்பை நோன்பின் மூலம் ஏற்படுத்தி, இறைவனின் அன்பையும் அருளையும் பெற்று அம் மனத்திருப்தியை புனித "ஈதுல் பித்ர்"  எனும் நோன்புப்  பெருநாளில் வெளிப்படுத்துகின்றோம்..

அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல் பருகாமல் மட்டுமல்லாது, இறைவன் தவிர்க்கச் சொன்னதைத் தவிர்த்து அவனின் திருப்தி நாடி, நாம் பிடிக்கும் நோன்பானது, நல்ல பண்புகளையுடைய மனிதர்களை உருவாக்குவதன் மூலம் சமூகத்திற்கும், அதன் அங்கத்தவனாகிய மனிதனுக்கும் பாதுகாப்பளிக்கின்றது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் நோன்பை ஓர் கேடயம்" எனக் குறிப்பிட்டார்கள்.

நோன்பானது அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையிலான ஓர் தொடர்பு............நிய்யத்தை ஒருவர் வாய்மொழிந்த மறுவிநாடியே , இறைவன் தன்னை அவதானித்துக்கொண்டிருக்கின்றான் என உறுதியாய் நம்பி, அன்றைய பொழுதின் நோன்புக்கான வேளைகளில் தன் இச்சைகள், உணவுகள் அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிவிடுகின்றான். எனவே நோன்பு உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாய் அமைகின்றது!

நோன்பானது தொடர்ச்சியாக இறையச்சம், திருமறையின் வசனங்கள், நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி, சட்டதிட்டங்களைப் பின்பற்றும் பயிற்சியைக் கொடுக்கின்றது. இந்தப் பயிற்சி ஒருமாதம் வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டாலும் கூட வாழ்க்கை முழுவதும் நீடிக்கின்ற சிறப்புரையாக அமைகின்றது..

அத்துடன் நோன்பானது அன்புடன் ஒருவர் பசியுணர்ந்து, ஏழை வாழ்வின் துக்கம் பகிர்ந்து ,அவர்கள் உணர்வை உணர்வதன் மூலம், ஏற்கனவே அந்தஸ்து மாயையுடன் விரிக்கப்பட்டிருந்த ஏழை, பணக்காரன் எனும் பேதத்தைக்  களைத்து , சமத்துவத்தைப் போற்றுகின்றது. 

அத்துடன் சகோதர ஒற்றுமையை மேம்படுத்த ஏழைகளுக்குதவும் வழிமுறைகளையும் நோன்பு சொல்லித்தருகின்றது. "ஸகாதுல் பித்ர்" எனப்படும் ஏழைகளுக்கான பித்ராவையும் வழங்க நம்மை வழிப்படுத்தி நிற்கின்றது. நோன்பை விட்டவர்களும், ஏதும் குறையையுணர்ந்தவர்களும் இப் பித்ராவை வழங்க வேண்டும்.

அதுமட்டுமல்ல நோன்பானது, நம் உடலாரோக்கியத்திற்கும் அத்திவாரமாய்த் திகழ்கின்றது. ஒருமாத ஓய்வின் மூலம் உடலுறுப்புக்கள் சீராகத் தொழிற்பட வழியேற்படுகின்றது.

இதனையே நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்
"நீங்கள் நோன்பு நோற்பதன் மூலம் சுகதேகிகளாக மாறிக் கொள்ளுங்கள்"

இஸ்லாம் ஒவ்வொரு தனி மனிதனையும் அவதானத்துடனும், அனுதாபத்துடனும் நோக்குகின்றது. புத்திசுவாதீனமற்றவர்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் , முதியோர், கடும் நோயாளிகள் , நீண்ட தூர பிரயாணிகள் என்போர் நோன்பை விடுவதற்கான அனுமதியையும் இஸ்லாம் தந்து நிற்கின்றது.

புனித நோன்பின் மகுடமாகவிருக்கும் நாட்களுள் "லைலதுல் கதிர்" இரவுமொன்றாகும். அல்குர்ஆன் , நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டது இவ்விரவிலேயே ஆகும்.இது ரமழான் மாதத்தின் கடைசி நாட்களில் வரும் இரவாகும்.

 "லைலதுல் கதிர் ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தில் ஒற்றையான இரவுகளில் இந் நாளை எதிர்பாருங்கள் "

என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

ஆனால் என் சிறுபராயமுதலின்று வரை நோன்பின் இருபத்தேழாம் நாளன்றே லைலதுல் கதிர் இரவாகக் கொள்ளப்பட்டதாக எனக்கு ஞாபகம்..

(இந்த நாட்கணிப்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதை நான் இணையத்தில் வாசித்துள்ளேன். இது சரியா, தவறா என நான் வாதவிடவில்லையிங்கு..... ஆனால் என் வாழ்வில் கடந்து சென்ற நாட்களில் 27ம் நாளை லைலதுல் கதிராக தியானித்தது ஞாபகம். )

சிறுபராயத்தில் அன்றைய தினவிரவில் கைகளுக்கு மருதாணியிட்டும் உறக்கம் கலைத்து , நல்லமல்கள் புரிந்ததும் இன்றுபோல் உலர்ச்சியின்றி ஞாபகத்திரையிலோடுகின்றது...

மனிதனொருவனின் முழு வாழ்விற்கும் தேவையான நன்மைகளை அல்லாஹ் இந்த இரவினிலேயே இறக்கி வைத்துள்ளான்.


" மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். அகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு என்றால் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அதில் மலக்குகளும் ஆன்மாவும் (ஜிப்ரீல்) தம் இறைவனின் கட்டளைப்படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். அந்த சந்தியானது விடியற்காலை வரை இருக்கும்." (97:1-5)


எனவே நமக்கு அதிகம் நன்மை தரும் இந்த இரவை நன்மையான செயல்களுடன் கழிக்க வேண்டும். குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்றவை நம்மை இறைவன்பால் நெருங்க வைக்கும்.

இத்தகைய சிறப்புமிகு ரமழான் மாத நோன்பு நிறைவுற்ற பின் ஷவ்வல் மாத தலைப்பிறை தென்படும். அன்றைய தினம் ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் நம்முள்ளத்தை நீராட்டிச் செல்கின்றது.

நாம் செய்கின்ற ஒவ்வொரு நற்செயல்களும் நம்மை மறுமைக்குள் உள்ள நிம்மதியான அழகுமிகு வாழ்க்கைக்குள் இட்டுச் செல்கின்றது. ரமழான் மாதம் இன்னும் ஓரிரு நாட்களில் எம்மை விட்டுச்செல்லவுள்ளது.  இத்தருணத்தில் எம் தவறுகளுக்கும் இறைவனிடம் கெஞ்சி பாவ மன்னிப்பையும் பெற்றுக் கொள்வதுடன் ,அவனருளையும் ஏந்திக்கொள்வோமாக!

இதனை வாசிக்கும் என் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்

                                       ஈத் முபாரக்



2012/08/13

சத்தியமும் அசத்தியமும்


நம் வாழ்க்கை அற்புதமானது. நம்  வாழ்வின் ஒவ்வொரு  நகர்வும், இயற்கை அருட்கொடைகளுடன் பிண்ணிப்பினைந்துள்ளது. அவ்வியற்கையழகை, தேவையை நிராகரிப்போர் இப்புவியின் மனிதப் பிறவிகள் எனும் அந்தஸ்தைப் இழந்து விடுகின்றனர்.

ஒவ்வொரு படைப்புக்களும் இறைவனால் படைக்கப்பட்டு , அவற்றுக்கான வாழ்வியல்  விதிமுறைகளும்  வகுக்கப்பட்டு, இப் பிரபஞ்சத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அவை உயிருள்ளவை, உயிரற்றவை,சக்தியென பேதப்பட்டவாறே, ஒவ்வொன்றும் தத்தமது இயல்புகளினால் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆனாலும் இவ் வேற்றுமைகளிலும் ஒற்றுமையிருப்பதன் மூலமாக நமது வாழ்விலும் இவை தொடர்புபட்டுள்ளது.

ஆறறிவு படைத்த உயிருள்ள மனிதன் தன் செயல்களினாலேயே தன்சூழலில் வாழும் ஏனைய ஐந்தறிவு  கொண்ட மாக்களிலிருந்தும் வேறுபடுகின்றான். அவனாற்றும் செயல்களில் கலந்துள்ள நன்மை, தீமைகளிலிருந்தே மறுமை வாழ்வுக்கான அத்திவாரமும்  பலமாக இடப்படுகின்றது. நாம் செய்கின்ற செயல்களுக்கான அடித்தளமாக  சத்தியமும், அசத்தியமுள்ளடங்குகின்றன.  செயல்களினடிப்படையில் நம்மை இனங்கண்டு, இயற்கையுடன் உவமித்து ஏகவல்ல இறைவன்  அருளிய பல திருவசனங்களை அல்குர்ஆன் தன்னகத்தை ஏந்தியுள்ளது. அவற்றுலொன்று -


"வானத்திலிருந்து நீரை அவன் இறக்கினான் பின் ஓடைகள் அளவுக்குத்தக்கவாறு  (நீரைக் கொண்டு)ஓடின. பிறகு வெள்ளம் ( நீருக்கு மேல் மிதக்கும்) நுரையை மேலே சுமந்து சென்றது. (இதுபோன்றே) ஆபரணங்களையோ அல்லது சாமான்களையோ செய்வதற்காக நெருப்பில் அவர்கள் (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும், அதுபோன்று நுரை உண்டாகின்றது. இவ்வாறே சத்தியத்தையும், அசத்தியத்தையும் அல்லாஹ்  உதாரணமாகக் கூறுகின்றான். எனவே (அழுக்கு) நுரையோ வீணாகிப் போய்விடுகிறது. (ஆனால்) மனிதர்களுக்கு பலன் அளிக்கக்கூடியதோ பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே (நிராகரிப்போரை அழுக்கு நுரைக்கும், விசுவாசிகளைப் பூமியில் பயன் தரும் பொருட்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உவமைகளை விவரிக்கின்றான் ( 13:17)









2012/08/12

திருமறை



"மேலும் உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஹிக்மத் ( எனும் சுன்னத்தை ) தையும் நினைவுகூறுங்கள்.( அவற்றின் மூலம் உபதேசம் அடையுங்கள் ) நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவனாக                       

( யாவையும் )  நன்கறிந்தோனாக இருக்கின்றான்"  (33:34)


"நிச்சயமாக  அல்லாஹ்வுடைய  வசனங்களை விசுவாசிக்கவில்லையே  அத்தகையோர்  அவர்களை , அல்லாஹ்  நேர்வழியில்  செலுத்த  மாட்டான்.  அவர்களுக்கு  துன்புறுத்தும்  வேதனையுண்டு  "      (16:104)


" இன்னும் விசுவாசங்  கொண்டு  நற்காரியங்களையும்  செய்கின்றார்களோ ,  அத்தகையோர்  அவர்கள்  சுவனவாசிகள், அதில்  அவர்கள்  நிரந்தரமாக (த்தங்கி ) இருப்பார்கள் "                                                          (2:82)


" நிச்சயமாக  அல்லாஹ்வுடைய  வசனங்களை  விசுவாசிக்கவில்லையே  அத்தகையோர்  அவர்களை  அல்லாஹ்  நேர்வழியில்  செலுத்த மாட்டான் , அவர்களுக்கு  துன்புறுத்தும்  வேதனையுண்டு "          (16 : 104)



" உங்களிடமுள்ளவை ( யாவும் ) தீர்ந்து  விடும் , அல்லாஹ்விடம் உள்ளதோ நிலைத்திருக்கும், பொறுமையைக்  கடைப்பிடித்தோர்க்கு  அவர்களுடைய கூலியை  அவர்கள்  செய்து  கொண்டிருந்தவற்றில்  மிக  அழகானதைக்  கொண்டு  திண்ணமாக  நாம்  வழங்குவோம்  "               (16 : 96) 



" ( மனிதர்களே ) நீங்கள்  வறுமைக்குப் பயந்து  , உங்கள்  குழந்தைகளைக்  கொலை  செய்யாதீர்கள்.  அவர்களுக்கும் ,  உங்களுக்கும்  நாமே  உண​வை
( வாழ்க்கைத்  தேவைகளை  )  வழங்குகின்றோம். நிச்சயமாக  அவர்களைக் கொலை  செய்வது  பெரும்  குற்றமாக  இருக்கின்றது "  (17 :31 )


" விசுவாசங் கொண்டோரே ,உங்கள்  வீடுகள் அல்லாத (வேறு) 
வீடுகளில்  (நீங்கள் நுழைய அவசியம் ஏற்பட்டால், அவ் வீடுகளில்  உள்ளவர்களிடம் ) நீங்கள்  (மூன்று  முறை ) அனுமதி  கோரி, அவ்வீடுகளில்  உள்ளோருக்கு  ஸலாம் கூறாதவரை அவற்றில் ) நுழையாதீர்கள் இவ்வாறு நடந்துகொள்வ) துவே  உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்  நீங்கள் நல்லுபதேசம்  பெறும்  பொருட்டு  ( இது  உங்களுக்குக் கூறப்படுகின்றது "  ( 24 : 27 )


அடுத்த பக்கத்திற்குச் செல்க

திருமறையின் அருள் மொழிகள் சில



இயற்கையின் அற்புதப் படைப்புக்களில் வானமும் பூமியும் அடங்கும். அவற்றிலுள்ள சிருஷ்டிகளைப் பற்றி எம் மனம் ஆராயும் போது வியப்புக்கள் தான் மனதை வளைத்துப் பிடிக்கின்றன. ஆகாயத்திலே தொங்கிக் கொண்டிருக்கும் மிக அதிக எடையுள்ள சூரியனும், சந்திரனும், உடுக்களும், கோள்களும், ஏனைய வான் பொருட்களும் அவற்றின் அமைப்புக்களால் நம்மை வியப்பூட்ட, மறுபுறம் பரந்து நிற்கும் இப் பிரபஞ்சமும் அதனை நிறைத்திருக்கும் உயிரினங்களும், உயிரற்றவைகளும் நம்முள் ஆச்சரியங்களாக மாறுகின்றன.

அல்லாஹ்வின் இச் சிருஷ்டி பற்றி இறக்கப்பட்டுள்ள திருமறை வசனங்களுள் இவையும் சிலவாகும் ...........

"நிச்சயமாக அல்லாஹ்(தான்) வானங்களையும், பூமியையும் உண்மையாக க்கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை (மனிதனே)நீ பார்க்கவில்லையா! அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வந்தும் விடுவான் "        (14:19)


"வானங்களிலும், பூமியிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன,இன்னும் முன்னிரவிலும், நடுப்பகலை அடையும் சமயத்திலும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்)   (30:18) 


"ஆகவே, (விசுவாசிகளே) நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருங்கள்"  (30:17)


--------------------------------------------------------------------------------------

"வானவெளியில் (அல்லாஹ்வின் கட்டளைக்குக்) கட்டுப்பட்டவையாக 

( பறந்து செல்லும் ) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா அல்லாஹ்வைத் தவிர ( வேறொரு வரும் ) அவற்றை தடுத்து நிறுத்தவில்லை நிச்சயமாக விசுவாசங் கொண்ட சமூகத்தார்க்கு இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன " (14:79)


"நிச்சயமாக அல்லாஹ்.அவனை வானங்களிலும், பூமியிலும் உள்ளவைகளும் ( தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக பறவைகளும் துதி செய்து கொண்டிருக்கின்றன என்பதை ( நபியே! ) நீ காணவில்லையா! 
( இவற்றில் ) ஒவ்வொன்றும் தன் தொழுகையையும் , அவனைத் துதி செய்யும் முறையையும் திட்டமாக அறிந்திருக்கின்றன. மேலும் அல்லாஹ் இவைகள் செய்பவற்றை நன்கறிந்தவன்" (24:41)

---------------------------------------------------------------------------------------

மேலும், மலைகளிலும், மரங்களிலும் அவர்கள் கட்டுபவைகளிலும் நீ கூடுகளை அமைத்துக்கொள்" என்று உமதிரட்சகன் தேனீக்களுக்கு உள்ளுணர்ச்சிகளை உண்டாக்கினான் .  (16:68)


---------------------------------------------------------------------------------------

"பேரீச்சை, திராட்சை (ஆகிய) பழங்களிலிருந்து மதுவையும், அழகான உணவையும் நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்கள் , நிச்சயமாக இதிலும் அறிகின்ற கூட்டத்தினருக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது"     (16:68)


------------------------------------------------------------------------------------------

"பின்னர், நீ எல்லா விதமான கனி(யின் மலர்) களிலிருந்தும் உணவருந்த பின்னர், உனதிரட்சகனின் வழிகளில் ( அவை உனக்கு ) எளிதாக்கப்பட்டதாக இருக்கச் செல்"  ( எனவும் உணர்வை உமதிரட்சகன் உண்டாக்கினான் ) 
இதனால்  அதன்  வயிறுகளிலிருந்து  (தேனாகிய)  ஒருபானம் வெளியாகின்றது. அதன் நிறங்கள் மாறுபட்டவையாகும். அதில் மனிதர்களுக்கு  குணப்படுத்தலுண்டு.  நிச்சயமாக,  இதிலும் சிந்திக்கக்கூடிய கூட்டத்தினருக்கு  ஒரு அத்தாட்சி  இருக்கின்றது"  (16:69)







2012/08/11

அல்(f) பாத்திஹா




திருமறை தரும் அருள் வசனங்கள் அல்லாஹ் எனும் அழகிய 
எழுத்துருக்களுடன் இன்றைய பதிவாக  என் வலைப்பூவில் வாசம் தருகின்றன...அல்ஹம்துலில்லாஹ்!

---------------------------------------------------------------------------------
"அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)  "  (1:1)





"அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது "(1:2)


"(அவன்) அளவற்ற அருளாளன் மிகக் கிருபையுடையவன் "( 1: 3)



"(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி "( 1:4)



"(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் "(1:5)



"நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! "  ( 1:6)






2012/08/06

பத்ர் போர்



பத்ர் யுத்தம் நடைபெற்ற இடம்

நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத்தின் பின் பதின்மூன்று வருடங்கள் பல்வேறு கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு மக்காவில் வசித்திருந்தார்கள். இறுதியில் அவர்கள் தமது தாயகத்தை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எனினும் நபியவர்களைத் துன்புறுத்துவதை காபிர்கள் விட்டுவிடவில்லை. அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல விடாது தடுத்தும் வைத்திருந்தனர்.

மேலும்  அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள் மீதும் கடினமான பொருளாதாரத் தடையைத் திணிப்பதில் உறுதியாக இருந்தனர். மதீனாவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரயாணக் கூட்டங்களைத் தடுத்தும் வைத்தனர். இந்தத் தடையானது நீண்ட காலம் நீடித்து, மதீனாவாசிகளின் மீது பெரும் சுமையையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தியதோடு, அத்தியாவசியமான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக செங்கடல் ஓரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்த்திலும் அவர்களைத் தள்ளியிருந்தது.

அபூஜஹ்ல், கடினமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு கடிதத்தை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பியிருந்தான். அதில் நபியவர்கள் மீதான தாக்குதலுக்கும், யுத்தத்திற்குமான ஏற்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தான்.

இவ்விடயத்தில் இரண்டு புனித அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின,

'அநியாயத்துக்குள்ளானவர்களுக்கு, யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ், இவர்களுக்கு உதவி செய்யப் ஆற்றலுடையோனாக இருக்கின்றான். இவர்கள், நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம். மனிதர்களில் அக்கிரமம் செய்யம்சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்படும் மஸ்ஜித்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவர் உதவி செய்கின்றாரோ அவருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான்' (அல்ஹஜ்- 39,40)


அந்த யுத்தத்திற்கான நாளும் வந்தது.


அது ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமழான் பிறை 17 ஆகும்.

மக்கத்து இறை நிராகரிப்பாளர்களான குறைஷியர்கள், உலகிலிருந்து இஸ்லாத்தை அழிக்கும் நோக்குடன் பெரும் படை திரட்டி "பத்ர்" எனும் இடத்தில் போரிடத் தயாரானார்கள்.

பத்ர் இடம் பற்றி அல்குர்ஆனில் பின்வரும் வசனங்கள் காணப்படுகின்றன.

"புனித மக்காவிலிருந்து 310 கி.மீ தூரத்திலும், மதீனாவிலிருந்து 155 கி.மீ தொலைவிலும் இரு நகரங்களுக்கு மத்தியில் அமைந்த  பகுதி "பத்ர்" !
நபி(ஸல்) அவர்களின் தலைமையில் அணிவகுத்த நபித்தோழர்கள் . வானவர்களுடன் இணைந்து போரிட்டு இஸ்லாத்தின் தடைக்கற்களைத் தகர்த்தெறிந்த புனித யுத்த பூமி அது! "  (அல்குர்ஆன் 3:123)


" பத்ர்" பள்ளத்தாக்கு பின்வரும் அடையாளங்களைக் கொண்டிருந்தது.
--------------------------------------------------------------------------------------------
* முதல் அடையாளம் (வலமிருந்து) - முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து வந்து முகாமிட்டிருந்த அருகில் உள்ள பள்ளத்தாக்கு "அல் உத்வத்துல் துன்யா"!

* இரண்டாவது அடையாளம் - வியாபாரக் கூட்டத்தினர் கடந்து செல்லும் கணவாய்ப் பகுதி

* மூன்றாவது அடையாளம் - ஜபலுல் மலாயிக்கா (அல்குர்ஆன் 8:42)

அவர்களது இந்த எதிர்பாராத போரழைப்புக்கு நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் தயாராகினார்கள்.

 பத்ர் பிரதேசம் குறைஷிக் காபிர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அவர்களது யுத்தப்படையில் ஆயிரம் பேர் இணைந்திருந்தார்கள்.
ஆனால் நபி(ஸல்) அவர்களின் தலைமையினாலான படை போருக்காக தயாராகிக் கொண்டிருந்த பகுதி வெறும் மணற்பாங்கான பகுதியென்பதால் முஸ்லீம் அணியினர் பெரும் அசௌகரியத்தினையே எதிர்கொண்டனர். இருந்தும் அவர்கள் அல்லாஹ் தஆலா மீது கொண்டிருந்த நம்பிக்கையை கைவிடவில்லை.

அவர்களது படைப்பிரிவில் சுமார் 313 பேரே இருந்தனர். குறைஷியர்களை விட  அவர்கள் ஆட்பலத்தாலும், ஆயுதப் பலத்தாலும் பலவீனமான நிலையிலேயே இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் ஈமானிய பலம், அல்லாஹ்வின் அருள் , ஒற்றுமையுடனும் தியாகத்துடனும் போரிடக்கூடிய மனோபலமும் அதிகமாகவே இருந்தது. இவர்களிடமிருந்த ஆத்மீகப்பண்புகள் காரணமாக ஒழுக்கவிழுமியங்களும் அதிகமாகவே இருந்தது.

இதுவோர் பாரிய யுத்தமாகும். நபியவர்களுடன் இருந்த முஸ்லிம் போராளிகளுள் முஹாஜியர் சங்கடநிலைக்கானார்கள். அவர்களுள் சிலர் தமது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், பிள்ளைகளுக்கெதிராகவும் போரிட வேண்டிய நிலையிலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாச உணர்ச்சிக்கு அடிபணியாமல், அல்லாஹ்வையை ஈமான் கொண்டு தம் ஆத்மீக பலத்துடன் போரிட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் பத்ர் யுத்தத்தில் போர்ப்படைத் தளபதியாக நின்ற இடம் "ஜாமிஉல் அரீஷ்" எனப்படுகின்றது.


                                              "ஜாமிஉல் அரீஷ்"

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் துஆ வை ஏற்று, முஸ்லிம்களுக்கு உதவியாக ஆயிரக்கணக்கான வானவர்களை அல்லாஹ் இறக்கி வைத்தான். சஹாபாக்களுடன் இணைந்து போரிடுவதற்காக மலக்குகள் வந்திறங்கிய மலையே "ஜபலுல் மலாயிக்கா" (மலக்குகளின் மலை) எனப்படுகின்றது.


நபி (ஸல்) அவர்களின் தலைமையினாலான 313 பேரை மாத்திரம் கொண்ட சிறிய முஸ்லிம் படை அல்லாஹ்வின் உதவியைப் பெற்று, 1000 பேரைக் கொண்ட எதிரிகளின் தாக்குதலை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகரமாக முறியடித்து பாரிய வெற்றியைப் பெற்றார்கள்..

இப் பத்ர் வெற்றித் தினமானது 'யௌமுல் புர்கான்" என அல் குர்ஆனில் அழைக்கப்படுகின்றது. இதன் பொருளானது சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் தினமாகும். இப் போர் வெற்றியானது இஸ்லாமிய எழுச்சிக்கு பெரும் உறுதுணையாகவிருந்தது.

முஸ்லிம்களுடைய வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், முஷ்ரிகீன்களுக்கு சாதகமான ஒரு சந்தர்ப்பத்தை முறியடிப்பதற்காகவும் நடைபெற்ற இப்போர் நமக்கொரு படிப்பினையாகும்.

"பத்ர்" யுத்தத்தில் 14 ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் நல்லடக்கம் செய்யப்பட்ட பத்ர் ஸஹாபாக்களின் கப்ருக்கள் இவைதான்



"அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரை "மரணித்தவர்' என்று கூறாதீர்கள்! அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் அதனை உணரமாட்டீர்கள்"
(அல்குர்ஆன் 2:154)

பத்ர் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொகை பின்வருமாறு-
--------------------------------------------------------------------------------------------------------------
தாரீக் கமீஸ்      -84
இப்னு ஹிசாம்    -84
தாரீக் யாகூபி     -86 
தபகாத்            -84
பிஹார்           -84
தாரீக் தபரீ       -84   (ஆதாரம் - தாரீகுல் ஹமீஸ்)

இறந்தவர்களின் சடலங்களை வீசியெறிந்த கிணறு "அல்கலிப்" எனப்படுகின்றது.



எத்தகைய கொடுமைகள் நிகழ்ந்த போதிலும் நபியவர்கள் பிரச்சினைகளின் தீர்வாக யுத்தத்தை நாடியதில்லை. நபி(ஸல்) அவர்களின் யுத்தங்கள், நிலவிஸ்தரிப்பு, பழிவாங்கல் போன்ற நோக்கங்களைக் கொண்டவையல்ல.

நபி(ஸல்) அவர்கள் யுத்தத்தை விரும்பாத போதும் கூட , இஸ்லாமிய அழைப்புக்களுக்கான தடுப்புச்சுவர்களாக எதிரிகள் செயற்படும் போதும், உடன்படிக்கைகளை முறிக்கும் போதும், அநீதியான ஆட்சியும், அதிகார துஷ்பிரயோகமும் இடம்பெறும் போதும், முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாத்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும், சத்திய வார்த்தையை உயர்த்துவதற்காகவும் தேவைப்பட்ட இறுதித்தீர்வாக யுத்தத்தைக் கைக்கொண்டார்கள். 

இவ்வாறான போர்களின் வெற்றி மூலம் இஸ்லாம் சர்வதேச ரீதியில் பலப்படுத்தப்பட்டதுடன், அடிமைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம்களின் ஏற்றத்தாழ்வுகளும் நீக்கப்பட்டன. நடுநிலையான ,நேர்மையான, நீதியான ஆட்சிகள் நிலைப்படுத்தப்பட்டன. இஸ்லாமிய எழுச்சிக்கு இவ்வாறான யுத்தங்களும் பங்களிப்புச் செய்துள்ளன என்பதும் மறுக்கப்படாத உண்மையாகும். 

அநீதிக்கெதிராக  ஜிஹாத் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்பதை இத்தகைய யுத்தங்கள் நமக்குணர்த்தி நிற்கின்றன.


2012/08/05

பிர் அவ்ன் அழிப்பு


திருக்குர்ஆன் - அத்தியாயம் 28
----------------------------------------------
 திருமறையின் இறை வசன ஆதாரங்களிலிருந்து திரட்டிக் கொண்ட  பிர்அவ்ன் அழிவு தொடர்பான சம்பவங்கள்
-------------------------------------------------------------------------------------
மென்மையான மனிதமானது பொறாமை, ஆணவம், கபடம் போன்ற துர்க்குணங்களால் சூழும் தருணத்திலிருந்தே அழிவுக்காக அத்திவாரமிடப்படுகின்றது.

அத் தீயகுணத்தின் சரித்திரமாக இன்றும் நம் நினைவுக்குள் விழுந்து கிடப்பவன் பிர்அவ்ன்.....தானே இறைவன் எனும் மமதையில் இருந்தவனை இறைவன் அழித்தமை பற்றி திருக்குர்ஆனில் அல் கஸஸ் (சரித்திரம்) எனும் அத்தியாயத்தில் இறைவன் தெளிவாக விளக்குகின்றான்.

மூஸா அலை அவர்கள் எகிப்தில் பிறந்த இஸ்ரேல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . அப்பொழுது எகிப்தில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த (பார்வோன்) பிர் அவ்ன் குறி சொல்பவர்களை நம்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். எகிப்தில் பிறக்கும் ஒரு ஆண் பிள்ளையின் கையால் பிர் அவ்ன் கொல்லப்படுவானென குறிகாரன் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்கப்போகும் அனைத்துக் குழந்தைகளையும் கொல்லும்படி அவன் கட்டளையிட்டான்.

எகிப்திய பூமியில் தன் ஆட்சியைப் பலப்படுத்திய பிர்அவ்ன் மனிதர்களை பல பிரிவாக்கி அவர்களை பலஹீனப்படுத்தி தானே இறைவன் என மார் தட்டிய ஒருவனாவான்..

அவ்வாறான ஓர் சூழலிலேயே மூஸா நபி (அலை) அவர்களும் பிறந்தார்கள். பிர் அவ்னால் அக்குழந்தைக்கு ஏதும் நடந்துவிடுமோவென அவர்களின் தாயார்  அஞ்சிய போது அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்தது.

மூஸா நபி (அலை) அவர்களுக்கு பாலூட்டும்படியும், அவரது பாதுகாப்பு பற்றி பயமேற்பட்டால் பேழையில் வைத்து ஆற்றில் போடும்படியும், அவர்கள் மீள திருப்பி தாயிடம் சேர்க்கப்படுவார்களெனவும், தூதர்களில் ஒருவராக மாற்றப்படுவார்களெனவும் வஹீயில் அறிவிக்கப்பட்டது.

மூஸா நபி (அலை) அவர்களின் தாயாரும் அவ்வாறே செய்தார்கள். வைக்கோலினால் படகு போன்று செய்து  நைல் நதியில் மூஸா  (அலை) அவர்கள் விடப்பட்டார்கள், பேழையில் மிதந்து வந்த மூஸா நபி (அலை) அவர்களை பிர் அவ்னுடைய மனைவி நைல் நதிக்கு குளிக்கச் சென்ற போது கண்டெடுத்தார். பிர் அவ்னனிடம் மனைவி தன் கணவனிடம் , அக் குழந்தையைக் கொல்ல வேண்டாமெனவும், சுவீகார புத்திரராக வளர்க்கலாமென்றும் கூறினாள்.

மூஸா (அலை) அவர்களின் தாயாரோ தன்னிதயம் வெறுமையடைந்து மிக்க கவலையுற்றார்கள். அந்த இரகஸியத்தை வெளிப்படுத்தாமல் இறைவன் அவர்களின் மனதைக் கட்டுப்படுத்தினான். எனினும் அக் குழந்தை தூரத்திலிருந்து அக் குழந்தையின் சகோதரியால் கண்காணிக்கப்பட்டது.

மூஸா (அலை ) அவர்கள் பிர் அவ்ன் வீட்டிலேயே வளர்ந்தார்கள். அக்காலத்தில் எகிப்தியரிடம் அடிமைகளாக இஸ்ரேலியர்கள் இருந்ததால், மூஸா (அலை)யை வளர்க்கும் பொறுப்பு அவரின் சொந்தத் தாயிடமே ஒப்படைக்கப்பட்டது.. தன்னினத்தின் அடிமைத்தனம் கண்டு அவர்கள் மனம் வருந்தினார்கள்.

மூஸா (அலை )அவர்கள் வாலிபத்தையடைந்த போது இறைவனால் அவர்களுக்கு ஞானமும், கல்வியும் வழங்கப்பட்டது. மீண்டும் அவர் , அவர் குடும்பத்தவரிடம் சேர்க்கப்பட்டார்கள்.


"அவர் வாலிபத்தையடைந்து, (வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலை பெற்றபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் நாம் வழங்கினோம், இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் ( நற்) கூலி வழங்குவோம்" (28:14)


ஒருசமயம் அந்நகரத்தில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவன்  இஸ்ரேலிய இனத்தையும், மற்றவன்எகிப்தியனாகவும் காணப்பட்டான். இஸ்ரேலிய இனத்தை சார்ந்தவன் மூஸா (அலை ) அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கேற்ப அவ் எகிப்தியனைக் அவர் குத்திக் கொன்றார்கள்.. எனினும் பின்னர் அச் செயல் அவர்களுக்கு வருத்தமளிக்கவே மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக்கேட்டார்கள். இறைவனும்  மன்னிப்பை வழங்கினான்.


" என் இராட்சனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக நான் ஒரு போதும் இருக்க மாட்டேன்" என்று அவர் கூறினார் (28:17)


தன் எகிப்தியனைக் கொன்றதற்காக பிர் அவ்னால் மூஸா அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதனைக் கேள்வியுற்ற   பட்டணத்திலிருந்த ஒருவன் ஓடி வந்து அச்  செய்தியை  மூஸா (அலை) அவர்களிடம் கூறினான்.


" மேலும் , பட்டணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைவாக (ஓடி) வந்து, "மூஸாவே ! நிச்சயமாக உம்மைக் கொலை செய்து விட , (இந்நகரப்) பிரதானிகள் ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால் நீர் (இங்கிருந்து) வெளியேறிவிடும். நிச்சயமாக நான் (உம்முடைய நன்மையைக் கருதி) உபதேசம் செய்பவர்களிலுள்ளவனாவேன் " என்று கூறினார். (28:20)


இதனைத் தொடர்ந்து மூஸா அலை அவர்களும் தனது குடும்பத்தினருடன் இரவோடு இரவாக வெளியேறி பாலைவனத்தையடைந்தார்கள். நீண்ட பயணத்தின் பின்னர் மதியன் எனும் இடத்தையடைந்தார்கள். இஸ்ரேலிய மக்களுக்கு இறை தூதராக அனுப்பப்பட்ட சுஹைப் (ரலி) அவர்கள் மூஸா (அலை) யை அடையாளம் கண்டு தன்னுடன் தங்க வைத்ததுமல்லாமல் தன் மகளையும் திருமணம் செய்து வைத்தார்கள்.

அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்த பின்னர் எகிப்திற்கு திரும்ப வேண்டுமென்ற எண்ணத்தை இறைவன் மூஸா (அலை) அவர்களிடம் ஏற்படுத்தினான். திரும்பிச் செல்லும் போது , பாதை எதுவும் தெரியாத நிலையில் தடுமாறினார்கள். அப்பொழுது தூரத்தில் நெருப்பைக் கண்டார்கள். அந் நெருப்பிலிருந்து ஏதும் தகவலறிந்து வருவதாக மூஸா அலை அவர்கள் தன் குடும்பத்தினரிடம் கூறி விட்டு அந் நெருப்பை நோக்கிப் புறப்பட்டார்கள்

நெருப்பை அண்மித்ததும்


"மூஸாவே"


என அழைக்கப்பட்டார்கள். அது "சினாய்" மலை. இறைவனுடன் பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது

"நிச்சயமாக நான்தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றி விடும். நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்"

"இன்னும் நான் உம்மை என் தூதராகத் தேர்வு செய்தேன். ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக"


"நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயகன் இல்லை. ஆகவே என்னையே நீ வணங்கும். என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக "


என இறைவன் பேசினான்.


"மூஸாவே ! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன" என்று இறைவன் கேட்க,



(அதற்கவர்)"இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறி தேவைகளும் நிறைவேறுகின்றன. " எனக் கூறினார்.


அவர் கையிலிருந்த தடியை கீழே போடும்படி பணிக்கப்பட்டார்கள்.

அப்பொழுது அத் தடி பெரிய மலைப் பாம்பைப் போன்று நெளிந்தது. அதனைக் கண்டு அச்சமுற்றவராக திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓட முற்பட்டார்கள்.. அப்பொழுது இறைவன் அவரைப் பயப்பட வேண்டாமெனவும், அவர் பயமற்றவர்களில் ஒருவராவார்கள் எனவும் கூறினான்.


" உம்முடைய சட்டைப்பைக்குள் உம்முடைய கையை நுழைப்பீராக. அது எவ்விதத் தீங்குமின்றி (பிரகாசமுள்ள) வெண்மையாக வெளிப்படும். பயத்திலிருந்து (விடுபட) உம்முடைய புஜங்களை உம் (விலாவின்) பால் சேர்த்துக் கொள்வீராக. இவ்விரண்டும் பிர் அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் ( நீர் எடுத்துச் செல்வதற்கு) உரிய உமதிரட்சகனிடமிருந்துள்ள இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராகவே இருக்கிறார்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது) (28:32)



"இவ்வாறு என்னுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து சிலவற்றை உமக்கு காண்பிக்கின்றேன்  பிர் அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்."


அதனைக் கேட்டதும் , மூஸா அலை அவர்கள் அச்சப்பட்டார்கள்.
பிர் அவ்ன் கூட்டத்தில் உள்ள ஒருவனை ஏற்கனவே தான் கொலை செய்தமையால் அவர்கள் தன்னைக் கொலை செய்யக்கூடுமென அஞ்சி, தன் சகோதரனான ஹாரூன் அவர்களையும் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவர் வேண்டுதலை நிறைவேற்றினான்.

" (அதற்கு அல்லாஹ்) " உம் சகோதரரைக் கொண்டு உம் புஜத்தை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களிருவருக்குமே வெற்றியைத் தருவோம். ஆகவே அவர்கள் உங்களிருவர் பால் நெருங்கமாட்டார்கள். நீங்கள் நம்முடைய அத்தாட்சிகளுடன் (செல்லுங்கள்) நீங்களிருவரும், உங்கள் இருவரைப் பின்பற்றுவோரும்தான் வெற்றி பெறக் கூடியவர்கள் " என்று கூறினான்.  (28:35)

14:6. "மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்

10:83." ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்"

அவ்வாறே இறைவன் கட்டளைப்படி மூஸா அலை அவர்கள் இறைவன் பற்றிய தெளிவான அத்தாட்சிகளை எடுத்துக் காட்டியபோது பிர் அவ்ன் கூட்டத்தினர் அது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் என நிராகரித்தனர்.

0:77. "அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்"

10:80. "அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்"


10:81அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்


26:43. "மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்"


26:44. "ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்"


26:45. "பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது"


26:46." (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்"


26:47. "அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம் என்றனர்"


 ஆனாலும் பிர் அவுன் தானே இறைவன் எனக் கூறினான்

 “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான். 



(7:115) "பிர் அவ்னே ! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார் "



20:57“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்."

20:61. "(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்"


எனினும் பிர் அவுன் தன் கருத்திலிருந்து மாறாமல் தன்னையே இறைவனாகக் கூறினான்-


" (அதற்கு) பிர் அவ்ன், "பிரதானிகளே ! என்னைத் தவிர வேறொருவரு (வணக்கத்துக்குரிய) நாயகன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஆகவே ஹாமானே! களிமண்ணின் மீது ( செங்கல் சூளைக்கு) எனக்காக நெருப்பை மூட்டி (அவற்றைக் கொண்டு மிக உயரமான ) மாளிகையை எனக்காக நீ கட்டுவாயாக, (அதில் ஊறி) மூஸாவுடைய இராட்சனை நான் எட்டிப் பார்க்க வேண்டும்.(அவர் தனக்கு வேறு இராட்சன் இருப்பதாக கூறுகிறாரே, இவ் விஷயத்தில் நிச்சயமாக அவரைப் பொய்யர்களில் உள்ளவராகவே நான் எண்ணுகிறேன் " என்றும் கூறினான் (28:38)

இவ்வாறு பெருமையடித்துக் கொண்டு திரிந்தான்  பிர் அவ்ன் .

7:127. "அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்"

பிர் அவ்ன் மூஸா ( அலை) அவர்களுக்கு துன்பம் விளைவிக்க தொடங்கிய தருணத்தில் இறைவனின் வஹீ மூஸா (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது

26:52. "மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம் "

மூஸா (அலை) வஹீயின் பிரகாரம் செயற்பட்டார்கள்.


20:77. "இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்,"

26:61. "இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்"


26:63. "உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது"


26:64. "
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்"

26:65"மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்."

ஆனால் பின்தொடர்ந்த பிர் அவ்ன் அவனது படையினருடன் பிடிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.

இது தொடர்பாக இறைவன் திருமறையில் கூறும்போது பின்வருமாறு கூறுகின்றான்:-

" ஆதலால் நாம் அவனையும், அவனுடைய படையினரையும் பிடித்தோம். பின்னர் அவர்களைக் கடலில் எறிந்து விட்டோம். ஆகவே ( நபியே) அநியாயக் காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை நீர் கவனிப்பீராக!" (28:40)


(7:103) " அவர்களுக்குப் பிறகு மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் பிர் அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பி வைத்தோம், அப்போது அவர்கன் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள், இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக " என்று இறைவன் கூறினான்.


இவ்வாறாக இறைவனை நிராகரித்துத் திரிந்த முந்திய பரம்பரை அழிக்கப்பட்ட பின்னர் மூஸா அலை அவர்களுக்கு" தவ்றாத் "எனும் வேதம் வழங்கப்பட்டதன் மூலமாக மனித குலம் நேர் வழியையும் , அருளையும், படிப்பினையையும் பெற்றதாக அல்லாஹ் தஆலா "அல் கஸஸ் " எனும் அத்தியாயத்தின் மூலமாக எம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கின்றான். (அல்ஹம்துலில்லாஹ்)

மூஸா (அலை அவர்கள் "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என அழைக்கப்பட்டவர். திருக்குர் ஆனில் அதிக தடவை பெயர் இடம் பெற்ற நபியாவார்கள். இவர்கள் 120 வயது வரை வாழ்ந்தார்கள்.

இறை நிராகரிப்பவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருப்பதற்காக இன்றும் பிர் அவ்ன் உடல் சிதைவடையாமல் உள்ளது.