About Me

2012/07/26

மயக்கமென்ன



அவன் ......................!

முப்பதைத் தாண்டாத அழகான வாலிபன்........நான் குடியிருக்கும் பகுதியிலேயே அவனும் அறையொன்றையெடுத்து நீண்ட காலமாக தங்கியிருக்கின்றான்..அரச வைத்தியசாலையில் தாதியாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் அரச ஊழியன் அவன்...!

நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒற்றைப் புன்னகையொன்று மட்டுமே பரிமாறுவோம்..........ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் ரொம்ப நல்லவன்....அவனிடமுள்ள பலகீனம் பெண்களுடன் இயல்பாய், சரளமாய் பேசுவான், அவன் நிற்கும் இடங்களில் கலகலப்பு பூத்துக் கிடக்கும்

அவன் அவசர அவசரமாக ஒருத்தியைக் காதலித்து கரம் பிடித்து 2 வயது பெண்பிள்ளையின் தந்தை என்பது மட்டும் எனக்குத் தெரியும்..அவன் மணவாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் விவாகரத்து வரை நீள மீண்டும் தனிமரமாகி நிற்பதைக் காணும் போது என் மனசுக்கும் சற்றுச் சங்கடம்தான்......

மனம் நன்கு ஒன்றித்துத்தானே காதலிக்கிறார்கள்........ஏன் அந்தக் காதல் சீக்கிரம் அறுகின்றது...............ஆசை கொண்ட மனம் அலுப்பதற்குக் காரணமென்ன ...................யாரைத்தான் குறை சொல்வதோ!

ஆனால் நான் அவனை அடிக்கடி ஒரு பெண்ணுடன் கண்டிருக்கின்றேன்... அவளும் அவனுடன் வேலை செய்பவள் தான் போல்..தாதி சீருடையிலேயே அவனுடன் அவன் இருப்பிடத்திற்கு வருவாள்....

வீட்டுக்கார சகோதரியின் கண்டிப்பான உத்தரவின் பேரில் அவன் அவளை  தன்னறைக்கு அழைத்துச் செல்வதில்லை. வெளியே உட்கார்ந்து பேசுவார்கள். அல்லது இருவரும் உடனே வெளியே சென்று விடுவார்கள்..

அவள் சற்றுக் குண்டான மாநிறமான சின்ன வயசுப் பொண்ணு......அழகிய என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, அவனுடன் ரொம்ப கலகலப்பாகப் பேசுவாள்......

திடீரென ஓர் நாள் அடிக்கடி வந்தவள் காணாமற் போனாள்.  .....அவளுக்கென்னாச்சு...........அவள் யார்.......அவனின் நண்பியா...... காதலியா.....இல்லை வருங்கால மனைவியா...
வீண் ஆராய்ச்சிக்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை...

பாவம் தான் அவனும்...சின்ன வயதில் தன் வாழ்க்கைத் துணையை இழந்திருக்கின்றான்......தனக்கொரு வாழ்வை மீண்டும்  அமைக்க நினைப்பதில் என்ன தவறு .............அவனும் வாழத்தானே வேண்டும் !

என் மனமும் அவனுக்காகப் பரிந்து பேசியது...

ஒரு சில மாதங்களின் பின்னர் மீண்டும் ஒரு பெண்ணுடன் அவனைக் கண்டேன்...ஆனால் அவள் முன்பு கண்ட பெண்ணல்லள்..........இவள் சற்று மெல்லியவள்..........அவனுடன் மோட்டர் சைக்கிளில் வரும் போது உரசிக் கொண்டுதான் வருவாள்.......அவள் வயதின் பருவக் கிளர்ச்சி அவனுடன் நெருங்கிப் பழக வைத்துள்ளது.........

இவளும் கூட அவனின்........................

மீண்டும் ஒரு சில வாரங்களின் பின் அவனுடன் முதலில் சுற்றிய பெண் அவனைத் தேடி அவனிருப்பிடத்திற்கு வந்தாள்........முன்பெல்லாம் அவன் அறைக்குள் செல்லாதவள் அன்று நேரே அவனறைக்குள் சென்று அவனுடன் சண்டை போட்டாள்..........

அவனோ எதுவுமே பேசவில்லை.....ஆனால் அவள் கதறல் காற்றின் மௌனத்தினையும் கசக்கிப் பிழிந்தது........அவனது அறைப் பொருட்களை தூக்கியெறிந்தாள்...........சில நிமிட காதல் யுத்தத்தின் பின் அவள் அழுதவாறே வெளியேற அவனும் அவள் பின்னால் ஓடினான்..........

காதல் வளர்த்து கனவுகள் காத்து ஆசையுடன் அவள் எதிர்பார்த்துக் காத்திருக்கையில் அவன் ஏமாற்றி விட்டானா..................

அல்லது புது நண்பியின் வருகையால் அவர்களுக்குள் முரண்பாடு வளர்ந்து பிரிவுக்குள் இருவரும் தள்ளி விடப்பட்டனரா.........

காலத்தின் புதிருக்குள் அவர்கள் வினாவும் விழுந்து கிடக்கின்றது.

நான் அவனைக் காணும் போதெல்லாம் அவளைப் பற்றி கேட்பதேயில்லை...அவர்களது தனி வாழ்வின் ரகஸியங்களாக அவை இருக்கக்கூடும் இன்னும் சில நாட்களில் அவன் இடமாற்றமாகி தன்னூருக்குச் செல்லவுள்ளான்.........

அவன் காதல் சூழ்நிலைக் காதல் போலும்.........வெறுமைப்பட்ட மனதுக்கு அன்பு கிடைத்திருக்கின்றது.... ...அந்த அன்பில் சலிப்பு ஏற்படும் போது ஆளும் மாறுகின்றது..........முரண்பாடுகள் முளைக்கும் போது மனம் வெறுத்து புதிய துணையின் பால் ஈர்க்கப்படுகின்றது......

காதல் என்பது பரிசுத்தமான உணர்வுகளின் சங்கமம் எனும் நிலை மாறி, இப்பொழுதெல்லாம் அங்கு காமத்தின் சேர்க்கையும் கலந்து விடுகின்றது.
காமம் இல்லாத காதல் செல்லாக் காசாகிக் கிடக்கின்றது..

ஓர் ஆண் , பெண்ணாணவள் தன்னை நோக்கி கவரப்படுகின்றாள் எனத் தெரிந்து கொண்டதும் அவனின் மனதிலும் அவளை உள்வாங்கத் தயாராகின்றான்.....அன்பு இவ்வுலகில் மிகப் பெரும் சக்தியாக இருப்பதே அதற்குக் காரணமாகும்..

ஆனால் இது உறுதியானதாக அவளை மட்டுமே துணையாகக் கொள்ளுமளவிற்கு எல்லார் மனங்களும் ஒருமித்து கிடப்பதில்லை.ஆழமான அன்பு , காதல் இருப்பவர்கள் மட்டுமே அந்தக் காதலை திருமணம் வரை நகர்த்த, பெரும்பாலான ஆண்கள் தங்களின் தனிமைக்குள், வெறுமைக்குள் நிரம்பும் காதலி .......திருமணம் எனும் எல்லைக்குள் நகரும் போது.....பின்வாங்கி விடுகின்றார்கள்......இந்த ஆண் மனநிலையை ஒத்த பெண்களும் இருக்கின்றார்கள் என்பதும் கவலைக்குரிய விடயம் தான்...............

முள்ளில் சேலை விழுந்தாலும்
சேலையில் முள் விழுந்தாலும் பாதிப்பு சேலைக்கே!

பெண்ணும் சேலைக்கு ஒத்த மென் மனதால்.!
..அந்த பலகீனம் தான் ஆணுக்கு பலமாகி காதல் உலாவில் வலம் வர வாய்ப்பளிக்கின்றது !

உணர்ச்சிகளை அலை மோத விட்டு புரியாத வயதில் அறியாமல் நிகழும் தவறுகளின் தண்டனை பெரும்பாலும் பெண்ணுக்கே வழங்கப்படுகின்றது... அத்தண்டனையால் அவள் ஆயுட் காலமுழுவதும் முட்களும், சகதிகளும் நிறைந்த பாதையில் பயணிக்கின்றாள்..இந்த முடிவு அவளாகவே தெரிவு செய்தது...அவள்தான் அனுபவிக்க வேண்டும் !விடுகின்றன........

அனுபவங்களால் வாழ்வை பெண் உணரும் போது அவளது எதிர்காலம் அவளை விட்டு தொலைந்து போகின்றது !

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!