சாம விழிகளின் துயிலுக்குள் - என்
கனவுகள் அமிழ்ந்து கொண்டிருக்கும்!
முகவரியில்லாக் காற்றில் - என்
ஆன்மாவின் சிதறல்கள்
அலைந்து கொண்டிருக்கும் !
கவலை நுரைக்குள்
கரைந்து போன என் ஜீவன்
ஜீவிதத்தை தேடிக் கொண்டிருக்கும் !
நிதமும் என் சுவாசிப்பை
பொசுக்கும் வெம்மை
பெருமுச்சில் ஆவியாகத் துடிக்கும்!
வறுமை வலைக்குள் சுருண்ட
என் வாலிபம்
வெறுமையைத் தேடிக் கொண்டிருக்கும்!
சிரிக்க எனக்கும் ஆசைதான்
யதார்த்தப் பயமுறுத்தல்களில்
புன்னகை வேர்கள்
மரணித்துக் கொண்டிருக்கும்!
ஓ
இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை!
ப்ரிய நேசங்களின் சேமிப்பில்
இத்தனை துரோகங்களா!
இத்தனை வலிக்குள்ளும்
ஒற்றை மழைத்துளியாய் - நான்
தனிமைச் சிறைக்குள்
நனைகின்றேன்
விதியை நொந்தபடி!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!