மனசு வெள்ளைதான் !
இருந்தும்
வாலிபச் சிறைக்குள்
என் னிருப்பு !
கூக்குரலிடும் மனிதவேலியின்
சுயநல முடிச்சில்
ஆக்கிரமிக்கப்படுகின்றன - என்
ஜீவிதம்!
வாழ்க்கையைத் தேடும் பயணத்தில்
முட்களின் சுவடுகளில் - என்
மூச்சோரம் இளைப்பாறுகின்றது!
சந்தர்ப்பவாதங்கள்
இதயமறுக்கையில்
ஆத்மாவின் அவலம்
தீ வார்த்து வாழ்த்துகின்றது!
தேவைகளின் நெருடலில்
காலடி பிடுங்கும்
காரியவாதிகள்
நெஞ்சு பிளந்து
நஞ்சு தடவுகின்றனர் !
கனாக்களின் கருக்கலைப்பால்
வெளுத்துப்போன நிஜம்
வெம்மலின் ஆர்ப்பரிப்பில்
அடங்கிப் போகின்றது!
கண்ணீர் மோதுகையில்
காயம் பட்ட கன்னம்
கண்ணாடி முன்னாடி - அடிக்கடி
காணாமல் போகின்றது!
ஆணவத்தின் ஆணிவேரால்
உறிஞ்சப்படும் - பிறர்
வார்த்தைகள்
வசந்தத்தை மறந்து
நேசத்தைத் துறக்கின்றன!
ஓ
இத்தனை குணமாந்தரால்
இரவின் மடிதனில்
உறக்கம் தொலைத்து காணாமல் போகின்றேன்
உயிரும் இறந்து போகின்றேன்!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!