About Me

2012/07/27

கவிதை எழுதலாமே

இது கவிதை எழுத ஆர்வப்படுவோர் மட்டுமே வாசிக்க வேண்டிய பதிவு.கவிஞர் அல்ல. ஏனெனில் என்னை விட கவிஞர்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியும். கவித்துறையில் நான் சிறு கிள்ளையே. என் அனுபவங்களை வைத்து பிண்ணப்பட்ட பதிவிது.

கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாட்டு வடிவம். அது அனுபவங்களை நாம் நேரடியாக உள்வாங்குவதாலோ அல்லது பிறரின் அனுபவத் தெறிப்புக்களால் நமக்குள் உள்வாங்கப்பட்ட படிப்பினையாகவோ இருக்கலாம்.

இன்று முகநூலில் உலா வரும் புதுவிதமான கவிதைகளின் சிறப்பு பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அவை சொந்தக் கவிதையாகட்டும் அல்லது பிறரின் கவிதைகளை கொப்பி பேஸ்ட் பண்ணியதாக இருக்கட்டும். அவை யாவும் மனித உணர்வுகளின் பிரதிபலிப்புக்களே!

கவிதை எழுதுவதென்பது சிறப்பானதோர் ஆற்றல். ஆவலால் தூண்டப்படக்கூடிய ஆற்றல். இந்த ஆற்றல், ஆவல் எல்லோருக்கும் இயல்பாகவே உள்ளது. ஆனால் அவர்கள் அதற்கு முயற்சிப்பதோ பயிற்சியெடுப்பதோ இல்லை. ஒருவரின் ஆக்கங்களை தன் ஆக்கம் போல் வெளியிடும் இலக்கிய திருட்டைச்  செய்வதை விட, தனது உணர்வுகளை தானே கிறுக்கி கிறுக்கல்களாக வெளியிடுவது எவ்வளவோ மேல்.
-----------------------------------------------------------------------------------------
கவிதையெழுதும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தல் வேண்டும்
-----------------------------------------------------------------------------------------
1. நிறைய இலக்கியப் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்பொழுது நம்மால் பலவிதமான நிறைய சொற்களை அறிய முடியும். மொழிச் செம்மைக்கு இது உதவும். ஏனெனில் கவிதையின் உயிர்ப்போட்டத்திற்கு மொழி அவசியமாகின்றது.

2. எழுதும் மனதை வேறு சிந்தனைகள் குழப்பாமல் அமைதிப்படுத்த வேண்டும்

3.எழுதப் போகும் கருப்பொருள் எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அல்லது ஒரு படம் ஒன்றைத் தெரிவு செய்து அதற்கேற்ப எண்ணங்களை ஓட விட்டு எழுத முயற்சிக்கலாம்.

4.அந்தக் கருப்பொருளை மனதிலிறுத்தி அதற்கு வரக்கூடிய கவிதைகளை சந்தத்துடன் கவிதைப்பாணியில் நமக்குள் நாமே சொல்லிப் பார்க்க வேண்டும்.

5.வார்த்தைகள் வெளிப்பட வெளிப்பட அவ் வார்த்தைகளை ஒரு தாளில் குறித்துக் கொள்ள வேண்டும்.

6. மீண்டும் எழுதியவற்றை வாசித்துப் பார்க்கும் போது அதனைத் திருத்தம் செய்யத் தோன்றும். அவ்வாறு நினைப்பவற்றை திருத்தம் செய்யலாம். இவ்வாறு பல திருத்தங்களின் பின்னர் முழுமையான கவிதையொன்று பிறக்கின்றது.

6. கவிதை எழுதும் போது சில வார்த்தைகளை பிரித்தும், சிலவற்றை சேர்த்தும் எழுதும் போதுதான் கவிதை சிறப்பானதாக மாறுகின்றது

5. கவிதை எழுதும் போது எதுகை, மோனையையும் கவனித்தல் வேண்டும்.

6. கவிதைகளில் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க வெகு சிலருக்கு மட்டுமே புரியக்கூடிய  வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதே அக் கவிதை எழுதுவோர் பிறரின் கவனிப்புக்குள்ளாகின்றார். கவிதையும் சிறப்படைகின்றது. (உதாரணம் - மௌவல் - மல்லிகை)

7.கவிதை பிறக்க நேரகாலம் சொல்லமுடியாது. எப்பொழுது எழுத வேண்டுமென மனம் நினைக்குதோ, அப்பொழுதே அக் கவிவரிகளை குறித்தல் வேண்டும்.

8. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவற்றை சம்பந்தப்படுத்தி , வார்த்தைகளை கவியில் புகுத்தும் போதுதான் அக் கவிதை பிறரின் பாராட்டைப் பெறுகின்றது

9.பிறரின் கவிதைகளை வாசித்து அனுபவியுங்கள்.  நமக்குள்ளும் அவ்வாறு எழுதவேண்டுமென்ற தாக்கம் ஏற்படும்

10.தொடர்ந்த முயற்சி, பயிற்சி, பாராட்டு, ஊக்கம் காரணமாக நமது கற்பனை ஆழம், சொல் வார்ப்பு என்பவற்றில் முன்னேற்றமும், அழகும் ஏற்பட்டு கவிதை உயிரோட்டமுள்ளதாக மாறும்.

11.தொடர்ந்து ஒரே கருப்பொருளில் எழுதாமல் வித்தியாசமான அன்றாட வாழ்வோடு தொடர்புபடக்கூடிய விடயங்களுடன் பொருந்தக்கூடிய எண்ணங்களை சற்று கற்பனையும் கலந்து பதிவிட வேண்டும்.

12.நாம் கற்பனையில் கிறுக்கிய கிறுக்கல்கள் பிற மனங்களில் நிஜமெனும் மனத் தாக்கத்தை, நெருடலை ஏற்படுத்துமேயானால் நிச்சயம் அக்கவிதை உயிர்ப்புத்தன்மை வாய்ந்ததாகும்.

12.நல்ல கவிதையொன்றை எழுதி பிறர் அதனைப் பாராட்டும் போது கிடைக்கும் மனதிருப்தியை வார்த்தைகளால் அளவிடமுடியாது.

ஒவ்வொருவர் பாணியும் வித்தியாசமானது. ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது. கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும், அப்துர் ரஹ்மானும் எழுதும் பாணி வேறுபடக்கூடியது. நாம் நிச்சயமாக அவர்களைப் போல் வரமுடியாது. 

இருந்தும்..........

நம் ஆற்றலை நாம் ரசிக்கலாம்!
வளர்க்கலாம்!
நமக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிக்கலாம்!
கர்வமில்லாத நல்ல ரசிகனால் நல்ல கவிஞனாக மாறலாம்!

கவிஞராக மாற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!