About Me

2012/08/10

மாற்றங்களும் ஏமாற்றங்களும்


சுஹிர்தா............!

அவள் நகரிலுள்ள பிரபல்யமான தொலைத் தொடர்பகத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்தாள். மாதாந்தம் என் கைபேசி பாவனைக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக அந்நிறுவனத்திற்கு அடிக்கடி  செல்வதுண்டு. ஆரம்பத்தில் நிறுவன வாடிக்கையாளர் பிரதிநிதியாகப் புன்னகைத்தவள் நாளடைவில் நட்புடன் பேசத்தொடங்கினாள்.. அரிதான புகைப்படங்களை மின்னஞ்சல் வழியாக எனக்குப் பரிமாறுமளவிற்கு எங்கள் நட்பு  இறுக்கமடைந்திருந்தது.

அவள் எனக்குள் அறிமுகமாகி மூன்றாண்டுகள் உதிர்ந்து விட்டன. அழகான மெழுகுச்சிலை போன்ற உடல் வார்ப்பும், பளிச்சென்ற வெண் தோலும் அவளை எனக்குள்ளுமொரு அழகியாகவே பறைசாற்றியது. அவள் சூழல் கல்வி கற்ற மொழித் தாக்கத்தால் அவள் பாவனை மொழியாக ஆங்கிலமும் சிங்களமும்  நுனி நாக்கில் தவழும். அவள் என்னுடன் ஒருநாளும் தமிழில் பேசியதில்லை.

அந்நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்காக நான் செல்லும் போதெல்லாம் அவளுடன் இரண்டு வார்த்தைகளையாவது பேசாமல் வருவதில்லை. எனது அலுவல் முடிந்ததும் அங்கு சனக்கூட்டம் குறைந்திருக்கும் நேரத்தில் சிறிது நேரம் எங்கள் சொந்த விடயங்களைப் பற்றியும் கதைத்து விட்டு வருவேன்.

ஓருநாள்  அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். கைபேசி சிணுங்கியது . தன் மென்விரலால் கைபேசியை அழுத்தியவள் "ஹலோ" வென்றவாறே என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"என்  லவ்வர்தான் லைனில் நிற்கிறார் ..........பேசுங்க அவர் உங்களுக்கும் தெரிந்தவர்தான்"

நான் எதிர்பார்க்காமலே தன் 3ஜி கைபேசியை என்னுள் திணிக்க, நான் தடு மாறிப்போனேன்.

 "பரவாயில்ல சுஹி ! "

நான் மறுத்த போதும் வற்புறுத்தி என்னை அவனுடன் பேசவைத்தாள். அவனும் வீடியோ கோலில் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சகஜமாய் நலம் விசாரிக்கத் தொடங்கினான்"

"அவன்.......எனக்குத் தெரிந்தவன்..அவளது வருங்காலக் கணவன்............!"

மகிழ்ச்சியில் என் வாழ்த்துக்களை அவர்கள் வசப்படுத்திவிட்டுப் புறப்பட்டேன் என் வீட்டுக்கு!

தொடர்ந்து வந்த நாட்களில் அவள் காதலின் வளர்பிறைச் செழிப்பை எனக்குள் அடிக்கடி காட்சிப்படுத்துவாள்.

"எப்போ உங்கட கல்யாணம், என்னைக் கூப்பிடுவீங்க தானே"

ஒருநாள் நான் வேடிக்கையாகக் கேட்டேன்.

"இன்ஷா அல்லாஹ்! சீக்கிரம் முடிப்போம், நீங்க இல்லாமலா" காதலின் வசந்தத்தை அனுபவித்துச் சிரித்தாள். அவள் நாணத்தை அன்று ரசித்த போது அந்த அழகியின் இளமை பூத்த வெண் கன்னங்கள் செக்கச் சிவந்து கிடந்தன.

வருடங்கள் இரண்டு தாவியோடியது. நாங்கள் பல தடவைகள் சந்தித்தாலும் கூட அவளின் காதல் பற்றியும், அவனைப்பற்றியும்  துருவியாராயவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை. வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிப்பும், எம் வேலைப்பளுவும்  எங்களுக்கிடையில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி நின்றது. கண்டால் கதைப்போம் ..........அதுவும் ஓரிரு வார்த்தைகளாகச் சுருங்கிப் போனது

அண்மையில் ஓர்நாள் வழமைபோல்  எனது கைபேசியழைப்பிற்கான மாதக் கொடுப்பனவைச் செலுத்த  அந்நிறுவனத்திற்கு காலையில் சென்றிருந்தேன்.  அவள் வழமைக்குமாறாக கவுண்டரில் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சுகம் விசாரித்தாள்.  எங்களைப்பற்றி சிறிது நேரம் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த போதுதான் அவதானித்தேன் அன்றவள் மிக அழகாகவிருந்தாள். கழுத்து ,கை, விரல்களில் புதிய தங்க நகைகள் மின்னிக்கொண்டிருந்தன.

"ஏதும் விஷேசமா.............இயல்பாய் நானும் கேட்க, "

சிறிது மௌனித்தவாறு "ம் ம் " எனத் தலையாட்டினாள்.

அவள் காதல் கைகூடிவிட்ட மகிழ்வை நானும் வாழ்த்துக்களாக்கி அவளுக்கு முன்வைக்கப் போகும் போது, இடைமறித்தாள்

அவள் குரல் உடைந்து தளர்ந்து போனது . தான் கல்யாணம் முடிக்கப் போறவர்  பற்றிய விபரங்களைச்  சொன்னாள்.

"என் லவ்வர் என்னைப் பிரிஞ்சு இப்ப ஒரு வருஷமாச்சு!. எங்ககிட்ட பிரச்சினை வந்திட்டுது....அவர்ட்ட நிறைய முரண்பாடுகளிருக்கு. காதலிக்கும் போது அது எனக்குத் தெரியல. ஆனால் கல்யாணத்துக்கு நெருங்கும் போதுதான் அவரோட சுயரூபம், சுயநலம் எல்லாமே வெளியில தெரிஞ்சுது, அவர எங்கட வீட்டாக்கள் வேணாமென்று சொல்லிட்டாங்க"

அவள் தன் சோகங்களை அவிழ்த்தபோது நான் பிரமித்துப்போனேன். அவர்கள் தங்கள் காதலில் காட்டிய உற்சாகமும், நெருக்கமும் நன்கறிந்தவள் நான். சுஹி அவனுக்காக தன் வாழ்வில் காட்டிய மாற்றமும் கூட எனக்குத் தெரியும். அவனது விருப்புக்கேற்பவே அவளது நடை, உடை, பாவனை கூட அவளிடமிருந்து மாறிப்போனது. பிரச்சினைகள் வாழ்வில் ஏற்படுவது இயல்பே! ஏதோ சில அற்பங்களுக்காகவும், அடுத்தவர்களுக்காகவும் அவர்களின் அன்பு   காணாமல் அழுகிப் போனதுதான் எனக்கு கவலையாகவிருந்தது. அந்தப் பிரிவுத் தாக்கமும், ஏமாற்றங்களும், கோபமும் அவர்களிருவரையுமே அந்தக்கனவு  வாழ்க்கையிலிருந்து வேரறுத்து மறுத்து வேறொரு திசைக்குள் தள்ளிவிட்டது.

அவளை நான் கண்ணிமைவெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். தன் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்த துன்பத்தை அவள் மறைத்தவளாக,

"திருமணத்தைப் பற்றியும், தனக்கு மாப்பிள்ளை வீட்டார் அணிவித்துச் சென்ற திருமண அடையாளத்தைப் பற்றியும் அவள் கூறத் தொடங்க நானோ அதிர்ச்சியிலிருந்தும் கலையாதவளாய் விக்கித்து நின்றேன்..

மனப் பொருத்தப்பாடில்லாத இருவர் திருமணத்தி லிணைவதை விட, பிரிந்து செல்வது மேல்தான். ஏனெனில் சொற்பகால வாழ்வின் சந்தோஷங்களை  அத்துன்பங்கள் எரித்துவிடுகின்றனவே!.

"பெருநாளைக்குப் பிறகு எனக்கு கல்யாணம் வைச்சிருக்கிறாங்க........உங்கள இன்வைட் பண்ணுவேன்.........கட்டாயம் வரணும் "

சுஹா தன்னைச்சுற்றி வரையப்பட்டிருக்கும் விதியின் போக்குகளை எனக்குள் அவிழ்த்துக் காட்ட முயற்சிக்க, நானோ, அவர்கள் கசக்கியெறிந்த அந்த காதல் ஞாபகங்களை எனக்குள் நிழற்படுத்தியவாறு மெதுவாய் வீதிக்குள் இறங்கிக்கொண்டிருக்கின்றேன்.  





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!