About Me

2020/09/19

வழி கூறும் பட்டாம்பூச்சி

 


அசைகின்ற காற்றில் தடுமாறுகின்ற மலர்களை

அனுதாபத்துடன் பார்க்கின்றேன் இயற்கைக்குள் இசையாவிட்டால்

துடிதுடித்து வீழுமே இதழ்களும் மெல்ல

தரையைத் தொட்ட சிறகுகளாகப் பறந்திடுமே


மலரின் அமைதி பற்றிக் கவலைப்படாத

பட்டாம்பூச்சிகளை இரசித்துப் பார்க்கின்றேன் நானும்

தன் படபடப்பால் மலருக்குள் துடிப்பேற்றும்

தேன் உண்ணும் தீவிரவாதத்திலும் வியக்கின்றேன்


வானவில்லும் உடைந்து பறக்கின்றதோ தரையில்

வனப்பான சிறு உயிரின் துடிப்பில்

மனதும் ஒன்றித்துப் போகின்றதே  அடிக்கடி

மகிழ்வின் உச்சத்தில் உறைந்து போகின்றேன்


வாசத்தை வளியில் பிழிந்தூற்றி வனப்புடனே

பூத்திருக்கின்ற மலர்களை நோக்குகின்றேன் புளாங்கிதத்தில்

காத்திருக்கின்றதோ தவிப்புடனே அமைதியும் அலைய

காதலில் படபடக்கின்ற பட்டாம்பூச்சிக்கான அழைப்பிது

அறிந்ததால் ஏந்தினேன் அதனசைவை எனக்குள்


தன் ஊசித்துளை உறிஞ்சியால் தினமும்

ஊனம் ஏற்றாத மென்னிதழ்களைக் கசக்காத

உயர்ந்த ஒழுக்கத்தினை எங்கு கற்றதோ

உராய்ந்து மகரந்தம் அள்ளும் பணியும்

உயிரோடும் இசைகின்ற மேலான தாய்மைதானே

உருவாகின்ற ஒவ்வொரு பிறப்பிற்கும் வழிகாட்டும்

உத்தம குணம் கண்டு வியக்கின்றேன்.


உறிஞ்சிய தேனைக் காற்றும் உலர்த்தவில்லை

வருத்தத்தில் இதழ்கள் சிவக்கவும் இல்லை

அரு உயிர் கடத்திடும் பணிக்காக

விருப்பும் கொண்டதோ சிறு இதழ்களசைத்து

மறுப்பில்லாத அமைதிக்குள் அலங்கார மலர்களும் 

மயக்கத்தின் தித்திப்பில் பட்டாம்பூச்சியும் சூழ்கின்றதே


உருக்களில் பல வண்ணங்கள் ஏந்தி

உற்சாகமாகப் பறக்கின்ற பட்டுடலைத் தொட்டுவிட

காற்றையும் துரத்துகின்ற சிறுவர்களின் மனதாக

உருமாறுகின்றேன் நானும் பட்டாம்பூச்சியை தொட்டுவிட


விண் நோக்கி நீண்டிருக்கும் பூவுக்குள்

இன்பம் துளைக்குதோ பட்டாம் பூச்சியும்

மலரைப் பற்றிய சிந்தனை இல்லாக்

காமத்தின் சூத்திரம் இதுவாக இருக்கலாம்

ஒவ்வொரு பூக்களாக நுகர்ந்திடும் சேர்க்கைக்குள்

கொஞ்சம் கற்பினையும் கற்றுக் கொடுத்திருக்கலாம்


அமைதியான மலர்களுக்குள் பரபரப்பை ஊற்றுகின்ற

அழகான பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்பும் ஈர்க்கின்றது 

நானும் அந்த ரசிப்பினில் உறைகின்றேன்

நானிலத்தின் உயிர்ப்பிற்கும் கருதானே இவ்வுருவும்


குவிந்த இதழ்களின் விரல் நீட்டத்தில்

குதூகலகமாகப் பற்றுகின்ற பட்டாம்பூச்சியின் துடிப்புக்குள்

கலக்கின்றதோ உற்சாகமும் விடியலைத் துடைத்தவாறு

விரைவினைக் கற்றுக் கொள்ளும் நேரமிது


பட்டாம்பூச்சியின் பக்குவ முட்டைக்குள் நெளிகின்ற

முட்களைக் கொண்ட கம்பளிப்பூச்சியை விரும்புவாரோ

தொடுகையில் தெளிக்கின்ற விடத்தினை வெறுக்கின்றோம்

தீயதினைத் துரத்திடும் வேட்கையில் ஒதுங்கியே

நசுக்கிக் கொல்கின்றோம் பறந்திட முன்னரே

தீயோராகி துன்பத்தினை நுகர்கின்றதே பாவம்


ஆனாலும் பட்டாம்பூச்சியாக துளிர்க்கையில் துள்ளும்

மனதால் அள்ளுகின்றோம் அழகினை ஆசையாக

வெறுப்பும் விருப்பும் வாழ்வின் பக்கங்களாய்

வாழ்கின்றதே நம் எதிரில் பூச்சியாக

                                                                                                                                                                            ஜன்ஸி கபூர் - 18.09.2020


 
Kesavadhas
ஜன்ஸி கபூர் இமைத்தால் ஏதாவது வரி படிக்காமல் விட்டுவிடுமோ எனப் பயந்து பயந்து விழி இமைக்காது படிக்க வைக்கும் அழகான வரிகள்!
இஃது புகழ்ச்சி அல்ல!
அசையும் காற்றில் தடுமாறும் மலர்கள்
இயறகைக்கு இசையாது இழியும் இதழ்கள்
தரையைத் தொடும் மலரின் சிறகுகள்
தேன் உண்ணும் தீவிரவாதம்
வானவில் உடைந்து பறக்கிறதோ தரையில்-
இந்த நான்கு சொற்கள் போதும்!
இஃது கவிதையெனச் சான்றிட!
வாசத்தை வளியில் பிழிந்தூற்றி வனப்புடனே பூத்திருக்கும் மலர்கள்...
இங்கு வரை வீசுகிறது வாசம்!
அமைதியும் அலைய காதலில் படபடக்கின்ற பட்டாம்பூச்சிக்கான அழைப்பு!
அதனசைவை என்னுள் ஏந்தினேன்!
கவிஞருக்கே சாத்தியம்!
ஊனம் ஏற்றாத ஊசித்துளை உறிஞ்சி
மென்னிதழ்கள் கசங்க வில்லை!
உராய்விலும் காயத்தில் காயமில்லை!
காற்றுலர்த்தாத தேன்
மறுப்பில்லாத அமைதி
மயக்கத்தின் தித்திப்பு
சிறுவனாக மாறுகிறது மனம் பட்டுடல் தொட்டிட!
இது எவ்வகையினும் துன்பம் தராத காமசூத்திரம்!
வாத்ஸாயாயனர் இதைக் கண்டுதான் சூத்திரம் எழுதினாரோ?
நுகரும் சேர்க்கையில் கொஞ்சம் கற்பினையும் கற்றிருக்கலாம்
இந்த பட்டாம்பூச்சிகள்!
அமைதியான மலருக்குள் சுரந்த தேனை உறிஞ்சிக் கறந்து பரபரப்பை ஊற்றுகிறது பட்டாம்பூச்சி!
ரசிப்பில் உறைந்தேன்!
நானும்!
பட்டாம்பூச்சியின் பக்குவ முட்டைக்குள் நெளியும் முட்களுள்ள கமபளிப்பூச்சி!
தெளிப்பு விடம்!
தீயதை வெறுத்து துரத்துகிறோம்!
பட்டாம்பூச்சியாய் துளிர்க்கையில் அள்ளுகிறோம் ஆசையில்!
தலைப்பிற்கு முழுமையாக நியாயம் சொன்ன கவிதை!
வாழ்த்துகள்!




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!