About Me

2013/04/10

தளிர்கள் - 6




விளங்கவேயில்லை - உன்
விழிகளில் விலங்கிட்டு
வீழ்த்தினாய் என்னை !
இதுதான் காதலோ!

-----------------------------------------------------------------------------------------



இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்....
உன்னில் தொலைத்த என்னை!

------------------------------------------------------------------------------------------




தனிமை...............
துணிந்து சொல்லும்
நம்மைவிட்டுச் சென்றோரின்
அன்பை!
------------------------------------------------------------------------------------------


உன் வழிப் பாதைக்காய்
என் விழிப் பார்வைகள்!
நீ..............
உடைத்துச் சென்ற மனசின்
ஒவ்வொரு துண்டுகளும்........
உனைக் காட்டும் கண்ணாடிகளாய்
என்னுள்!
-----------------------------------------------------------------------------------


அழகாய் இருப்பது இறைவன் தந்த வரம்...........!

அந்த அழகினை மேலும் மெருகூட்டுவது நாம் பிறர் மீது வைத்திருக்கும் அன்பேயாகும்!
----------------------------------------------------------------------------------------


ஓர் ஆணிண் அன்பில் பூவாக மலரும் பெண்.........
அவன் அடக்குமுறையில் வீணாய் உதிர்க்கப்படுகின்றாள்......!

ஒவ்வொரு குடும்பத்தின் அத்திவாரமும் ஆணின் கரங்களிலேயே திணிக்கப்படுகின்றது! பெண் மென்மையுணர்ந்து அவள் உணர்வுகளை மதியுங்கள்...

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒளிந்திருக்கும் தாய்மைதான் ஆண்களைச் சுமந்திருக்கும்.
அவன் வருங்கால கருவையும் சுமக்கவிருக்கும்!
-------------------------------------------------------------------------------------------


மனசை கொஞ்சம் திறந்து விடு
உன்னில் நான் காதல் செய்ய வேண்டும்!

உன் கவலையை என்னில் சிந்தி விடு
என் கண்ணீரில் உன் அன்பைக் குலைக்க வேண்டும்!

உன் மகிழ்வை என்னில் பூசி விடு
உன் னுதட்டில் என் புன்னகை பதிக்க வேண்டும்!

உன் விழிகளை லேசாய் மூடி விடு
கனவாய் உன்னில் நான் மூழ்க வேண்டும்!
----------------------------------------------------------------------------------------


காதல் வலி தரும்.!
இருந்தும்...................
நினைவுகளைத் தூவிச் செல்லும் அதன் வழி
அழகானது!





---------------------------------------------------------------------------------------


தாய் கருவறை தந்தாள் தானமாய்......
நீயோ..........
மணவறை தந்தாய் மானசீகமாய்!
மனதுக்குள் இறக்கை கட்டி
பறக்கின்றேன் .......
என் வான் உன்னில்..........!
-----------------------------------------------------------------------------------------


அடி மனதின் ஆழ் நினைவுகளே கனவுகளாக கருக்கட்டப்படுகின்றன. 
ஒவ்வொரு கனவுகளும் நனவாக ................
தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சியைத் தானமாக்குங்கள்!
----------------------------------------------------------------------------------------


பூக்களாய் பூத்திருந்தேன்
முகவரி தந்தன தென்றல்........

உன் பாக்களில் வார்த்தைகளானேன்
காதல் இலக்கியமானாய் நீ!......

எதுகையும் மோனையும் நானறியேன்
ஏடறியா என்னிடம் மோதிச் சென்றாய் நீ!.....

இருந்தும்...........

இப்போதெல்லாம் மயங்கி நிற்கின்றேன் - உன்
அருகாமைக் கணங்களின் லயிப்பினில் நசிந்து!

-------------------------------------------------------------------------------------


தொலை தூர வானில்
அலையும் முகிற் காகிதங்களுக்கிடையில்......

விழி திறந்து கிடக்கும் நிலாக் கீறலாய்
ஒளி கசியும் உன் ஞாபகங்கள்...........!

நேற்று வரை நான் நானாகத்தான் இருந்தேன்
இன்றோ.................
என் எதிர்காலத்தின் கைரேகைகளில்
உன்னை பச்சை குத்திக் கொண்டாய் 
ஆக்ரோஷமாய்!

இப்பொழுதெல்லாம்.............
என்னுள் ஊடுறுவும் தனிமையில்
கல்லெறிந்து.....
கள்ளமின்றி சிரிக்கின்றாய் காதலுடன்!

உன் வில்லத்தனமும்
குழந்தைத்தனமும்.........
காதலும்...................

என்னுள் முத்தமாகி கசிகையில்
ஏக்கத்துள் வீழ்ந்து தொலைகின்றேன்
பக்கமில்லாத உன் நிழல் தேடி!
------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு குடும்பத்தையும் அழகாக உருவாக்குபவள் பெண். அந்தப் பெண்ணைப் பாதுகாப்பது அவளைச் சார்ந்துள்ள ஒவ்வொரு ஆணிணதும் கடமையாகும்.
--------------------------------------------------------------------------------------------


அம்மா............!

அச்சேற்றிக் கொண்டிருக்கின்றேன்
புதுமைப் பெண்களை!
உங்கள் கண்ணீர் ஈரத்தை மறைத்தபடி!

ரோசாவின் வாசங்களால் 
சுவாசம் நிறைத்துக் கொண்டிருக்கின்றேன்.......
நீங்கள் சூடியிருக்கும் முட்களை
மறைத்தபடி!

பாசத்தால் வேலியிடப்பட்ட
உங்கள் கருவறைக்குள் 
கல்லறை வார்ப்போரோடு பேரம் பேசுகின்றேன்
என் இரத்த உறவென!

நீங்கள் சிரித்திருப்பீர்களா.........
ஓர் துளியைத்தான் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
ஞாபகங்களை குலைத்தபடி!

தாயே..........

தரணியின்று துதிக்கின்றது உங்களை....
நீங்கள் அறையப்பட்டிருக்கும்
சிலுவையை புரிந்து கொள்ளாமல்!






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!