About Me

2020/10/01

அசதிக் கோவை

 

கற்பும் களவும்  இன்பத்தை உரச/

சொற் சுவையினில் களித்திடும் கலித்துறையும்/

கொற்றவனாம் வள்ளல் அசதியினைத் தாங்கியே/

நற்றமிழில் தந்ததே செவியும் இனித்திட/


அமுதம் பிசைந்து கவியூற்றிய ஓளவையின்/

அசதிக் கோவையை சுவைக்கையில் மனமினிக்குமே/

அற்புதக் கவி வார்ப்பின் நயத்தினில்/

அகமும் பருகுமே தமிழ்க்கவியின் புலமையை/


பொன்னுக்கும் புகழுக்கும் இசைகின்ற காலத்தில்/

எண்ணத்தில் சிறந்த வள்ளல் கோமானும்/

தன் கையால்  கூழினைக் கொடுத்தே/

நீக்கினானே ஓளவையின் அசதியையும் அன்பாலே/


அசதியை நீக்கியவனுக்காக அசதிக் கோவையை/

ஆக்கினாரே ஒளவையும் நற்றமிழில் கவியாற்றி/

இரண்டு பாடல்ச் சுவைகளின் இதத்தில்/

இதயமும் நனைகின்றதே பரவசமாய்ப் படர்ந்தே/


முற்றா முகில்மலையெனும் சிற்றிளம் பெண்/

பற்றினாள் உறவாய் பாச மகளுமானாள்/

கொற்றவன் மலைக்கும் சென்றாள் பொழுதொன்றில்/

சீற்றமோ வெம்மைக்கும் பாலைக்குள் அனலே/


கொட்டிய வெம்மையைத் தாங்குமோ கால்களும்

கொடுமைதானே வெயில் வலியும் அவளுக்கே/

முத்தமிழ் வித்தகர்  பிரிவின் வலிதனில்/

முடங்கிடுமோ உள்ளமும் அடங்காத் துயரில்/


கல்லாதோர் வனப்பிழப்பார் சூழ்ந்தோரும் துயருருவார்/

பொல்லாத உலகின் அடையாளமோ பணமும்/

அல்லலுக்குள் சுற்றுமே இளமை மனமும்/

எல்லாத் துன்பத்தின் திரட்சிக்குள் வீழ்வாளோ/


மகளும் என்றே கலக்கத்தில் தாயவளும்/

அசதி மன்னன் ஆளும் மலையின்/

அழகுக் காதலும் இசைகின்றதே வனப்பில்/


கயல்விழிப் பார்வைத்  துடிப்போடு இசைந்த/

காதலன் பார்வைக்குள் காண்பவை அவளே/

காடும் மலையும் பாறைகளும் மரங்களும்/

காதலால் கசிந்தே நினைவுக்குள் வார்க்கின்றதே/


காரிகை எழிலும் காதலன் துடிப்பும்/

கவித்துவத்தில் எழுகின்றதே வனப்பான காவியமாக/


ஜன்ஸி கபூர் - 1.10.2020


 




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!