About Me

2012/07/29

பிரிவில்


என் வாலிபக் கனாக்களில்
உனை நிறுத்தி
உலா வந்தேன் - நீயோ
சிறகொடித்து
வேர் முளைக்கின்றாய்
வேறொரு பூமியில் !

என் ஜனனத்தின் பதிவில்
உனைப் புகுத்தி
இறுமாந்திருந்தேன் - நீயோ
இரக்கமின்றியென்
இதயம் பிடுங்குகின்றாய்!

என்
மனச்சிறகுகளில் உனை
மணிக்கணக்காய் தைத்து
பயணிக்கத் துடித்தேன் - நீயோ
வெற்றுவெளியொன்றின்
கற்பாறையாய்
இறுமாந்திருக்கின்றாய் !

நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போ
நீயோ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்!

சந்தோஷம் விரட்டி - நம்
வசந்தங்களை மிரட்டி
நீயறைந்த ஆணி - என்
தனிமைச் சுவருக்குள்
என் சிறையிருப்பை
உறுதிப்படுத்துகின்றது!

கானாமற் போன கனாக்களைத்
தேடித் தேடியே - நாம்
கோணலானோம்
நடைப்பிணமுமானோம்!

இப்போ
ரணமாகிப் போனவுன்
பிரிவின் கணங்களுக்காய்
பிரார்த்தித்து பிரார்த்தித்தே - என்
உதடுகளும்
முடமாகிப் போகின!


- Jancy Caffoor-

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!