About Me

2012/07/30

அந்த சில நிமிடங்கள் !


இரவின் நிசப்தத்தில் என் சுற்றுப்புறம் அடங்கிக் கிடந்தது. கடிகார முட்களின் ஓசை தவிர்ந்த வேறெந்த ஒலிகளும் கலக்காத மௌனத்தில்  ஊர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது, அந்த அமைதியைச் சற்று சலனப்படுத்தும் விதமாக என் வீட்டுக் கடிகாரம் நள்ளிரவு மணி 12 ஐ அடித்தோய்ந்தது.

மனசேனோ கடந்த கால சில கசப்புக்களை நினைவிலிருத்தி, விழித் தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தது. சுடும் யதார்த்தங்களால் இருளின் செழிப்பில் கூட கனவுகள் எட்டிப்பார்க்க விரும்பவில்லை. அந்த இருண்டவெளியில்  ஊர்க்குருவிகளின் சிறகடிப்பும், சிறு குரலெழுப்பலும் அவ்வவ்போது வெறுமை வெளிக்குள் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சின்னக்குருவியிடம் இருக்கும் இந்தப் பறக்கும்  துணிச்சல் கூட என் வசமில்லாமல் போனது ஆச்சரியமே! பல்வேறு சிந்தனைக்குள் மனம் தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான், அந்த இருளை ஊடுறுவும் வண்ணம் டோச்லைற் வெளிச்சமொன்று நான் படுத்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தது.

அச்சத்தில் உயிர் உறைந்து கொள்ள, மனசு மட்டும் பலகீனப்பட்டு அலறிக்கொண்டிருந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது எனும் உணர்வுடன் சற்றுத் தலையை உயர்த்தி அந்த வெளிச்சத்தை நோக்கினேன்.

அந்த அறையின் மேற்பரப்பில் காற்று நுழைவதற்காக சிறு பூக்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அந்தக் கற்களினூடாகவே ஓளி வந்திருக்க வேண்டும். மீண்டும் அந்தப் பூக்கற்களை நோக்கி பார்வையைச் செலுத்தியவாறு படுக்கையிலிருந்து எழ  முயன்றேன். மின்னல் வேகத்தில் ஏதோ திரவ ஸ்ப்றேயொன்று நாசிக்குள் கலந்தது. அதன் வாசனை மலத்தியோன் என்பதை அநுபவ வாயிலாக உணரத்தொடங்கும் நேரம் .............. மெல்ல மெல்ல விழிகளும் தம்மை மயக்கத்தில் சொருகத் தொடங்கின. ..உடலோ தன் வலிமையை இழந்து வெற்றுக்கூடாய் உருமாறும் பிரமை!

"கள்ளன்.......கள்ளன்"

என்னருகில் உறங்கிக் கொண்டிருந்த என் தாயார் கலவரப்பட்டு சப்தமிடும் வார்த்தைகளின் உரப்பொலி படிப்படியாக என் நினைவுலகத்திலிருந்து மங்கத் தொடங்கியது.....

பல  நிமிடங்கள்..........

மூச்சை மட்டுமே ஏந்திய என்னுடல் இவ்வுலகை மறந்து கிடக்க, இருதயத்துடிப்பொலி மட்டும் என்னுயிர்ப்பை அடுத்தவருக்கு பறைசாற்றிக் கொண்டிருந்தது.











No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!