About Me

2014/07/25

முகநூல் துளிகள் - 2




ஆழ்ந்த அன்பும் பிரியக்கூடும்
ஆறடிக்குள் அடங்கும் மெய்க்கூட்டில்!

பிரிவென்பது......
பரிவில்லாத மனதின் ஆரவாரிப்பு!
------------------------------------------------------------------------------

கசப்பான கடந்த காலம் என்பது கசக்கப்பட்ட காகிதம் - அவை
மறதிக் கூடைக்குள் விழ வேண்டிய குப்பைகள்!
தூசு தட்டி சுகம் விசாரித்தால் - அவை
லேசான மனதை இரும்பாக்கி விடும்!

இரும்பு துருப்பிடித்தால்..
அருமையான உறவுகளும் தொலைந்து போகும்!

----------------------------------------------------------------------------

சிறகு விரிக்கும் வண்ணத்தி
சிறைப்படும் பூவில்தான்...
சுவையான மகரந்தம்!

வாழ்விலும்....
உறவுகளின் சிறையில்
சுமையான சுகங்கள்!

கோபமும் பாசமும்...
விட்டுக்கொடுப்பும் வீம்பும்...
பொறுமையும் பிரிவும்

அவற்றுள் சில உணர்வுத்துளிகள்!

-------------------------------------------------------------------------


நீர்க்குமிழி வாழ்க்கையைத் தேடிப் போகும்போதுதான் கானல் நீராய் ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் எட்டிப் பார்க்கின்றன. ஏக்கங்களுடன் அவற்றை தொட்டுவிடத் துடிக்கின்றோம்...

அந்தோ.....

என்ன பரிதாபம்...

உடைந்து விடுவது வாழ்க்கையல்ல...அந்த வாழ்க்கையை நேசிக்கும் மனதுதான்.....

காலம் சிலருக்கு வசந்தங்களை அன்பளிப்பாக்குகின்றது. சிலருக்கோ வெறும் துன்பங்களை மட்டுமே!

ஆனால்....

வாழத்தான் வேண்டும்..துயர முடிவு தெரிந்தாலும் கூட முன்னேற சிறுதுளியாவது தன்னம்பிக்கை இருந்தால் போதும்!

-------------------------------------------------------------------------

கேட்டுப் பெறுவதல்ல உண்மை அன்பு
தானாய் கிடைப்பது!
மனம் வருந்தச் செய்வதல்ல உண்மை அன்பு
மன வருத்தங்களைக் குறைப்பது!
காலம் சிதைப்பதல்ல உண்மை அன்பு
காணா விட்டாலும் தேடித் துடிப்பது!
வாழ்க்கை வெறுக்கச் செய்வதல்ல உண்மை அன்பு
அழிந்து போகும் அன்பை மீட்டித் தருவது!




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!