About Me

2020/09/25

கவிதாஞ்சலி

 

மரண ஊர்வலம் கீதமும் உயிர்ப்பிற்கோ

மகிழ்ந்த விழிகளில் மழையும் பூக்கின்றதோ

இசைக்குள் இசைந்த செவிகளும் சுருங்கியே

ஓசையிழந்தே வலியில் துடிக்கின்றனவே இப்போ


ஏழிசைச் சுரவரிசை ஏக்கத்தின் அதிர்வில்

ஏந்திடுமோ மனமினி காந்தக் குரலினை

சிந்திய புன்னகைகளினி கசிந்திடுமோ தகனத்தில்

சிந்தையின் கலக்கத்தில் வலியும் படர்கின்றதே


தலைமுறை கடந்தும் தளிர்த்திடுமே குரலும்

கலைக்கு இல்லையே முதுமையும் இறப்பும்

தழுவிய கொரோனா தகர்த்ததோ இனிமைக் குரலை

தவிக்கின்ற நெஞ்சங்களின் சோகங்களும் காற்றலையில்


இதயம் கனத்திடும் இரங்கல் மொழியிது

உதய கீதம் இசைத்த சோதரனுக்கே

உறங்கிடும் நீண்ட வாழ்வுக்குள் இனி

உலவட்டும் ஆன்மாவும் சாந்தி வெளியில்


ஜன்ஸி கபூர்  - 25.09.2020



 

கண்ணீர் அஞ்சலி
-------------------------------
நலம் வாழ வாழ்த்திய குரல்/
அழ வைத்ததோ நெஞ்சும் கலங்கிட/
உளப் பண்பால் உலகமே உறவாக/
உயர்ந்த அன்பால் விழிகள் நனைகிறதே/

மூச்சுக்காற்றில் மென்னிசையை வார்த்தே வாழ்ந்த/
முழு நிலாவுக்குள் திரையோ மரணத்தில்/
முதுமை அறியாத இனிமைக் குரலை/
முழு உலகமும் ஏந்துமோ செவியினில்/ 

தங்கத் தமிழில் பாடல்களைச் செதுக்கியே /
சங்கீத இசையால் தேனும் தெளித்த/
காந்தக் குரலோன் வசீகரித்த மனதில்/
கலக்கின்றதே கலியின் துளிகளும் கலங்கி/

அறுந்ததோ மூச்சும் அதிர்கின்றதே மனமும்/
வருந்தச் செய்ததே கொரோனாவின் வலிமையும்/
ஓரக் கண்ணில் துளிர்க்கும் கண்ணீர்/
ஓராயிரம் பாடலிசைத்த நிலாவுக்கு சமர்ப்பணமே/

 
ஏனோ விதியும் அழைத்ததோ மென்னிசையை/
தேனைச் சுவைத்த செவிகளில் இன்று/
வீழ்ந்ததே சோகமும்  விழியோரம் கண்ணீரே/
வாழுமே பல்லாண்டு இறவாப் பாடல்களும்/

 
கண்ணீர் அலை 
 
வானம்பாடி இசைத்த கானம் மனதிலே
உயிர்த்ததே தமிழ் மொழியும் பிசைந்தே
உணர்வில் தனிமை விரட்டும் மென்னிசையால்
உறவாகியதே நெஞ்சும் நறவுக்குள் செவியே
பல்லாயிரம் பாடல்கள் செதுக்கிய குரலும்
ஓர விழிகள் அழுதிடப் பறந்ததே



பாடு நிலாவுக்கு கவிதாஞ்சலி
 
இசையால் மயங்க வைத்த குரலுக்கு/
இன்று இரங்கலோ விழிகளில் கண்ணீரே/
இனி ஏந்துமோ செவியும் கீதத்தை/
இல்லையே இறப்பும் வானம்பாடியின் குரலுக்கே/

இதழோரப் புன்னகையை உறிஞ்சியதோ மரணமும்/
இனித்திடும் தேனிசைகள் உறங்கிடுமோ காற்றினில்/
மௌனம் ஏந்தும் விண்ணுலகப் பயணத்தில்/
மெல்லத் தவழ்கிறதே வலியின் வீரியம்/

மூங்கில் துளையினில் மூச்சினைப் புகுத்தியே/
தங்கத் தமிழில் வார்த்த குரலோசை/
தலைமுறை கடந்தும் வாழுமே ரசிப்பில்/
தரணியில் செழித்து தடமாகுமே அற்புதமாக/

உறவினைப் பிரிந்த வலியில் உணர்வுகள்/
உறங்கிடாத செவிக்குள் அதிர்கின்றதே பாடல்களும்/
சிரிக்கின்ற கன்னத்தைச் சிதைத்ததோ மரணமும்/
வரிகளில் புதைக்கின்றேன் நிலாவுக்கு கவிதாஞ்சலி/

Jancy Caffoor 






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!