About Me

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

2021/04/22

கறிவேப்பிலை

 

கறிவேப்பிலை நறுமணம் கமகமக்குமே சமையலில் 

அறிவோமே இன்று கொத்திலைகளின் மருத்துவத்தை 

கல்லீரல் பாதுகாப்புடன் கண்பார்வை சீராகும் 

தோல்த் தொற்றும் மாயமாகிப் போகும் 


தோற்றமும் அழகுடன் மிளிர்ந்தே சிறக்கும் 

நீளக் கூந்தலும் உடலைத் தழுவும் 

நீங்குமே நீரிழிவும் தீருமே தலைச்சுற்றும் 

செரிமானக் கோளாறும் சரியாகும் தினமும் 


செந்நிற இரத்தம் சுற்றியோடும் சரியாக 

பச்சையிலை பசியின்மையை நீக்கும் நமக்கே 

பருகும் சாற்றால் குமட்டலும் ஓடும் 

உடலுக்குப் பலமும் கிடைத்திடும் சிறப்பாக 


உயிர்ப்பான மூலிகையை உணவாகக் கொள்வோம் 

சுவைப்போம் நிதமும் தடுப்போம் நோய்தனை 

ஜன்ஸி கபூர்

நாணயம்

நம்பிக்கையை மனதிலேற்றி நம்மை நகர்த்திடும்/
நாணயமே ஆள்கின்றதே மனித வாழ்வினை/

நிலைமாறும் உலகைப் பற்றும் அச்சாணியிது/
நீங்குமே நுகர்வினால் நீடிக்கா  செல்வமாகி/

நுட்பமான சேமிப்பும் காக்குமே எதிர்காலம்/
நூதனசாலைகள் பேணிடுமே பழமைத் தோற்றங்களை/
  
நெஞ்சக் கலக்கம் நீக்கிடும் பொக்கிசமிது/
நேர்மையும் நாணயப் பண்பும் கொண்டோர்/
  
நொந்திடார் அவலங்களால் நிறைந்திடுவார் நிம்மதியினால்/
நோவும் துறந்தே மகிழ்ந்திடுவார் பொழுதெல்லாம்/

ஜன்ஸி கபூர்  
 

உதிரிப்பூக்கள்

 

வலியின் வலிமையில் வாழ்வது மூட/
வயதின் ஏற்றத்தில்  வனப்பது உதிர/
வாழ்கின்ற வனிதையும் வகுத்திடும் விதியோ/
வழிகின்ற நீரும் வருத்திடும் முதிர்கன்னியென/

உதிரும் நாட்களில் உறைகின்றதே ஆரோக்கியம்/
உன்னத வாழ்வினை உருக்குலைக்கும் தீநுண்ணிகள்/
உருவாக்கும் மரணங்களால் உதிரிப்பூக்களாகத் தேகங்கள்/  
உருவாக்கப்படுகின்ற நவீனத்தால் உறங்குகின்றன உயிர்கள்/

அரும்பிடும் முன்னர் அவலக் கறை/
அணைக்கின்ற காமம் அறுத்திடும் மூச்சை/
அழகிய ஆன்மாவுக்குள் அறைகின்றதே வன்புணர்வை/
அகிம்சை இற்றுப்போக அடைக்கலமாகின்றன சமாதிக்குள்/

வெஞ்சினம் கரைத்தே வெந்நீர் பூசும்/
வெறுக்கும் சமரினில் வெட்டப்படும் தேகங்கள்/
வெறுமை பூமிக்குள் விதைக்கப்படுகின்றன உதிரிகளாகி/
வெல்லுகின்ற வன்முறைகள் வெட்கப்படா கலியுகமிது

ஜன்ஸி கபூர்  

இடைவிடா அடைமழை

 


படர்கின்ற வெயிற் பூக்களை யறுத்திடவே/

இடர் மழையோ யிங்கு வெள்ளமாக/


வீழ்கின்ற துளிகளில் உதிர்ந்தோடும் மலர்களும்/

அவிழ்கின்ற மண் முடிச்சுக்களின் துளைகளும்/

வலியுடன் போராடி கரைந்தோடுகின்றன வலிமையுடன்/


சதைகளைத் துளைக்கும் ஈர வீரியமும்/

விதைக்கின்றதே குளிரினை உணர்வும் சிலிர்க்கின்றதே/


சாலையோரம் நனைந்தே வீசுகின்ற காற்றும்/

சொல்லிடுமோ கலைந்தோடும் கார்மேக இரகசியத்தினை/  

மனசுக்குள் சாரலடிக்கும் மேகவூற்றும் பேரின்பமே/


ஜன்ஸி கபூர்  

சித்திரவதைப் பார்வை



பெண்மைக்குள் தீயூற்றும் கலிகாலம் அணைப்பினிலே/

தாய்மையும் சூடுகின்றதே முட்கிரீடம் உயிரினிலே/

பருவங்கள் கடந்திடாத போதும் கரையேற்றும்/

பாதகங்கள் பாரினிலே அரங்கேற்றும் அவலத்தினை/


படிப்பேற்றாது அடுப்பூதும் அநுபவமதைக் கற்றிடவே/

பாதையினை வகுத்திடுவார் ஏழ்மைக்கும் கருணையில்லை/

இருமனமும் கலக்கின்ற திருமண பந்தத்திலே/

விரும்பிடுவார் சீதனத்தை சிதைந்திடுமே இல்லறமும்/


கொந்தளிக்கின்ற காமத்தினால் வல்லுறுக்கள் வட்டமிட்டே/

கொன்றொழிக்கும் உணர்வினையே வன்புணர்வும் சித்திரவதைக்குள்/

மங்கையராகப் பிறந்தோர் மாதவம் செய்தோரென/

முழங்கிடுவோரும் அறுக்கின்றார் அணங்கின் அடையாளங்களை/


வலிமைக்குள் வலி திணிக்குமிந்த வாழ்க்கை/

வேண்டாமே பாவைக்குள்ளோ சித்திரவதைப் பார்வை/

சிதறுகின்ற கனவுகளைப் பொறுக்குகின்ற விதியது/

அழியட்டும் அன்புக்குள் அவளுலகம் ஆளட்டும்/


ஜன்ஸி கபூர்  

ஆவாரை


ஆவாரையைப் பயன்படுத்துவோர் சாவாரோ நோயினில் 
ஆரோக்கிய வாழ்வினால் நாளெல்லாம் இதமே 

தாவரப் பகுதியெல்லாம் தந்திடுமே மருத்துவத்தை 
ஆதாரமே நமக்கும் பொன்மேனி அழகிற்கு 

நோய்க் கிருமிகள் பாய்ந்தோடும் விரைவாய் 
நோவினைத் தரும் புற்றும் நீங்குமே 

ஆவாரைப் பட்டையில் கெட்டியாகுமே பற்களும் 
ஆஸ்துமாவும் தீர்ந்து போகுமே தேகத்தில் 

மண்ணீரல் பலத்தில் மிரண்டோடும் காய்ச்சல் 
கண் எரிச்சலும் காணாமல் போகுமே 

ஆவாரப் பஞ்சாங்கம் ஆளைப் பலப்படுத்தும் 
ஆவாரப் பூவால் இரத்தமும் சீராகும் 

எக்ஸீமாவும் தாக்காது எழிலுக்கும் குறையிருக்காது 
எல்லோர் தேகத்திலும் கரும்புள்ளிகள் கரையுமே 

வாயுத் துன்பம் தேயும் இலைச்சாறில் 
நோயும் நீங்கி சிறுநீரகமும் சிறப்பாகுமே 

ஆவாரையின் உறுப்பெல்லாம் தேடித்தரும் இதத்தை 
அனுபவிப்போம் நாமும் வீட்டில் பயிரிட்டே 

இலை தண்டு வேர் பூவெல்லாம் 
இரணம் களையும் மூலிகையாய் முகங்காட்டுமே 

நாளின் புத்துயிணர்ச்சியை நயம்படத் தந்திடுமே 
தோலின் வறட்சியை விரட்டியே செழிப்பாக்குமே.

வெம்மையை உறிஞ்சி நிழல் விரித்திடும் 
வெற்றி வாழ்வைப் பற்றும் மருந்திதுவே 

 
ஜன்ஸி கபூர் 

மணிமுடி


 
புரட்டுகின்ற நூலும் 
        புதையலே சிந்தைக்கு/
புத்துணர்ச்சி தரும் 
        எண்ணங்களும் எழுதுகோல்களே/


புத்தாக்கச் சிந்தனையும் 
        செதுக்குமே வெற்றிகளை/
புது வழியைக் 
       காட்டிடுமே கல்வியும்/


சிரசேந்தும் அறிவில் 
       ஒழியுமே அறியாமையும்/
சிந்தையின் செயல்களில் 
      அனுபவமும் விரியுமே/

உனதான உரிமைகள் 
      உனைச் சேர்கையில்
உணர்வுக்குள் சுதந்திரமும் 
     உனை ஆளுமே

துணிச்சலின் முகவரியில் 
      முயற்சிகள் சேர
துணிந்த செயலினில்
       வலிமையும் கோர்க்க/ 

உறவுதனை அணைத்து 
      அன்பினை மொழிந்து/
கரும்பாய் இனித்திடும் 
      நடத்தையால் ஆளு/

கற்ற கல்வியால் 
      பெற்றிடுக மதிப்பும்/
சுற்றமும் போற்ற 
      ஏற்றமே எதிர்காலமாக/

மனிதம் சூட்டிடும் 
     மணிமுடி உன்னிலே/
இனிய வாழ்வும் 
      வளமான எதிர்காலமும்/

ஜன்ஸி கபூர்  


 பின்னூட்டம்

கவி பா.மா சேகர்
 
ஜன்ஸி கபூர் ஒவ்வோர் வரியிலும் ஓர் உன்னத நம்பிக்கையின் இழையோட்டம் மிளிர்வது படைப்புத் திறனுக்கான முதல் முத்திரை!
நேர்த்தியான சிந்தனைகளும் 
தெள்ளிய நீரோட்டம் போன்ற துல்லிய சொற்கோர்வைகளும் தங்கள் ஆளுமைக்கான சிறப்பம்சமாய்த் திகழ்கிறது!
மேன்மேலும் இவ்வாறான செறிவான கருத்துக்கள் அடங்கிய படைப்புகளை வழங்கித் தன்னிகரற்ற படைப்பாளராய்த் தமிழ்தொண்டில் சிறந்திட நல்வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே!!

பரவசப் பயணம்

 


பசுமை வெளிக்குள் 
    காற்றின் சோலை/
பரவசமாகத் துள்ளிடும் 
     பாலகன் புன்னகைக்குள்/

துளிர்த்திடும் வியர்வையெல்லாம் 
     விருப்புடன் கரைந்தோடும்/
துள்ளும் அழகுக்குள் 
     அள்ளுதே ஈர்ப்பும்/

படரும் உச்சி 
     வெயிலின் பார்வைக்கு/
தடையோ வாழை 
      இலைக் குடையும்/

நடையும் புதைகின்ற 
     சேறும் இன்பமே/
மடை திறந்த 
     வெள்ளமாக மகிழ்ச்சியே/

வயிற்றுப் பசியும் 
     ஆற்றும் சோற்றுடன்/
வயலுக்குள் அன்பால் 
     உழுதிடும் சிறுவன்/

ஜன்ஸி கபூர்  

விரிவாக்கமும் விளைச்சலும்


விரிந்திடும் அபிவிருத்தி விரட்டுது மாந்தரை 

விரித்திடும் வலையிலும் சிக்கவும் வைக்குது 

அரித்திடும் கறையானாய் வேரினைப் பிடுங்குது 

அழகென்ற பெயரினில் அவலமும் ஊட்டுதே 

விரிவாக்கம் செய்கையில் சுருங்கிடுமே வளங்களும் 

வியப்பூட்டும் வீதிகள் கண்ணீரிலே நனைந்தோடும் 

கண்ணை விற்றே வாங்கிடும் அழகால் 

பண்ணை வயல்களின் உயிர்த்துடிப்பும் அறுந்திடும் 

எண்ணற்ற தெருக்கள் புண்ணாக்கும் வயல்களை 

எண்ணங்களில் சோகம் வார்த்திடும் அகோரமாய் 

ஊரையே அழித்திடும் நவீனத்தின் ஓட்டத்தால் 

உயிர்களின் சாபமே பெரும் விளைச்சலாகும் 

ஜன்ஸி கபூர்

 

2021/04/21

ஆகாயம் - சூரியன் - சந்திரன்

 

ஆகாயம் ஏந்துகின்ற
     அழகுக்கோள்கள் யாவுமே/
ஆரத்தழுவுமே ஈர்ப்பினை
     இயற்கையின் விந்தையிது/
நகர்ந்திடும் மேகங்கள்
     உதறுகின்ற நீர்முத்துக்கள்/
நனைத்திடுமே மணற்றரையின்
     வெப்பக்கோடுகளும் குளிர்ந்திடவே/

சூரியன் விரித்திடும்
     சிறகின் ஒளியினில்/
சூடுகின்றதே புவியும்
     வாழ்விற்கான உயிர்ப்பை/
இன்னுயிர்கள் வாழ்ந்திட
     இயற்கையும் செழித்திட/
இதமாக அணைத்திடும்
     செங்கதிரோன்தானே இவனும்/

சந்திரனும் செல்லப்
     பிள்ளையோ நித்திலத்திற்கே/
அடர் இருளினில்
     மின்னொளி பாய்ச்சி/
அண்டத்திற்கே விளக்கேற்றும்
     அற்புதப் படைப்பே/
அழகு நிலாவெனக்
     கொஞ்சிடுவாரே மழலையரும்/

ஜன்ஸி கபூர்  
 

 

வேட(ம்)ந் தாங்கல் பறவைகள்



தரைக்குள் பூக்கின்ற முகமூடி மாந்தர்கள்/ 

விரைகின்ற நிமிடங்களுக்குள் கரைக்கின்றனர் வஞ்சங்களை/ 

அஞ்சாரே பாவக் கறைகளைப் பூசிடவே/

கொஞ்சிடுவார் துரோகங்ளும் விழிகளில் புன்னகைக்க/


அழகிய ஆன்மாவுக்குள் நெளிகின்ற புழுக்களால்/

அணைத்திடுவார் பாசத்துடன் காரிய வெற்றிக்கே/

தழுவிடும் மனங்களில்  தந்திரமாக வீழ்ந்தே/

பாழும் கிணற்றில் பக்குவமாக வீழ்ததிடுவார்/


மெய்க்குள் பொய்களை நிரப்பி வாழ்ந்தே/

பைக்குள் பணத்தினை நிரப்பிடுவார் வேடமிட்டே/

பல முகத்தோடு  பறந்திடும் பறவைகளாகி/

கலந்திடுவார் ஏமாற்றங்களை ஏற்ற தருணத்திலே/


மதியால்  விதியை அழகூட்டி களிப்புறுவார்/

சதியையும் தீட்டுவார் சந்தோசம் காட்டியே/ 

உறவாகி விரிக்கும் சிறகுக்குள் அக்கினியை/

உரசிடுவார் வேட(ம்)ந் தாங்கல் பறவைகளாகி/


ஜன்ஸி கபூர் 

 

முருங்கை


விரும்பி உண்ணும் முருங்கைக்குள் மருத்துவமே

அரும்பிய இலைகளும் தருமே ஊட்டத்தை

குருதியைச் சுத்திகரித்தே சுவாசத்தைச் சீராக்குமே

முகப்பருவினை நீக்கியே விரட்டுமே சூட்டினை

முருங்கையின் வலிமைக்குள்; சிறுநீரகமும் பலமே

மலட்டினையும் விரட்டி நலமாக்கும் வாழ்வினை

மலச்சிக்கல் நீங்க இதமாகும் உடலும்

அழகைப் பேணிட முடியும் நீளுமே

சளியைக் கரைத்து சந்தோசம் நிரப்புமே

சத்துள்ள இலையும் சொத்தே ஆரோக்கியத்திற்கு

வீட்டினில் வளர்த்தே பயனடைவோம் தினமும்

சித்த வைத்தியத்தால் சித்தமும் குளிர்வோம்


ஜன்ஸி கபூர்  


 


கயல்விழிப் பார்வையாலே கைதுசெய்து போகாதே

 

கயல்விழிப் பார்வையாலே கைதுசெய்து போகாதே/
புயலெனச் சுழற்றும் உணர்ச்சிக்குள் வீழ்த்தாதே/
மயிலுன்னைத் தழுவவே துடிக்கிறதே ஆசைகள்/
துயிலுக்குள் வீழ்ந்திடவா கனவுக்குள்  ரசித்திட/

செவ்விதழ் சிந்தும் தேனைச் சுவைத்திட/
சிறகு விரிக்கின்றேன் உன்னுள் படர்ந்திட/
திரை விரிக்கின்றாயே வெட்கத்துக்குள் மறைந்து/
தித்திப்பின் சுகத்தில் மூழ்கிடவா சுகமாக/

வெண்சங்குக் கழுத்தைத் தழுவிடவா மாலையாகி/
விரல்கள் தினமும்உன்னை மீட்டிடவா/
வெண்பனித் தூறலால் எனக்குள் பூத்தூவும்/
சின்னத் தாமரையே சிலிர்க்குதே தேகமே/

இருதயத் துடிப்பினுள் இரகசியமாக நுழைந்தவளே/
இரசிக்கின்றேனே இன்பம் உரசும் உன்னுறவை/
கொலுசின் ஒலிக்குள் கொழுவுதடி தவிப்புக்கள்/
கொஞ்சுகின்றாய் பார்வையாலே தஞ்சமடி உன்னிழலில்/

ஜன்ஸி கபூர்  

 



 

பிஞ்சுகளின் தேடல்

 

நெஞ்சத்தின் வேதனை கிழிக்கின்ற மனதும்/
அஞ்சுகின்றதே தினமும் வலியினைக் கண்டே/
பிஞ்சின் கனவுகளைச் சிதைக்கின்ற மானிடர்களின்/
வெஞ்சமரில் வேகுதே விளையாட்டுப் பருவம்/

துளிர்க்கின்ற உணர்வுகளைப் புரிந்திடாப் பெற்றோர்கள்/
அளிக்கின்ற சுமைகளில் கருகுகின்றதே ஆசைகள்/
உளியாகும் விரல்கள் செதுக்கின்ற புதுமைகள்/
ஊக்கம் காணாமலே ஊமையாகி முடங்குதே/

படிக்கின்ற வயதில் வடிக்கின்ற கண்ணீர்/
படியுதே வாழ்வினில் முட் சுவடுகளாக/
சிறகுகளை நனைக்கும் உழைப்பின் வியர்வையால்/
சிறார்களின் எதிர்காலம் விடியலின்றி இருளாகுதே/

வறுமையும் வாட்டமும் முடிவில்லாமல் தொடர்கையில்/
வழி தெரியாப் பயணத்தில் பாதங்கள்/
அழிகின்ற வண்ணங்களாய் ஆகுகின்றதே இன்பங்கள்/
அனலுக்குள் தவிக்கின்றதே தேடல் பாதைகள்/

ஜன்ஸி கபூர்  

தாங்கும் மனைகள்

 
அவலத்தை சூடி அவனியிக்குள் முகவரியான/
அன்பினைத் தேடுகின்ற வயோதிபக் குழந்தைகள்/

உதிரத்தால் செதுக்கி உணர்வுகளால் காப்பிடப்பட்ட/
உறவுகள் உதறியபின் உறைவிடமானதே காப்பிடம்/

சுருங்கிய தேகத்தினுள் சுமையேற்றும் துன்பங்கள்/
சுடாராகி வாழ்ந்தவர்கள் சுகமழிந்த அனாதைகளாய்/

தனிமையைச் சுவாசித்து தனக்குள்ளேயே உருகி/
தளர்ந்த நடைக்குள் தன்னாற்றலை முடக்கி/

தள்ளாடும்  முகங்களைத் தாங்கும் கரங்களாய்/
தரணியில் முகங்காட்டுகின்றன முதியோர் மனைகள்/

ஜன்ஸி கபூர் 

சுமைதாங்கி

 


சுட்டெரிக்கும் வெயில் சுற்றும் மேலாடையாக/
சுடும் தரைக்கு நிழலே செருப்பாக/
சுறுசுறுப்பே மூலதனமாம் முதுகேற்றும் சுமைக்கே/
சுகம் மறந்த சுமைதாங்கி இவளே/
சுமக்கின்றாள் உறவுகளை சுற்றமும் போற்றிட/

உள்ளத்தின் வலிமை உழைக்கும் முயற்சியும்/
உதறிடாத தன்னம்பிக்கை உணர்ந்த வாழ்க்கை/
உயர்த்துமே உன்னையும் ஊக்கமும் வெல்லுமே/
வறுமை  சுமக்கும் வலியும் பறந்தோட/
வருமே உனக்குமோர் வசந்தமான எதிர்காலம்/ 


ஜன்ஸி கபூர் 

வீர மங்கை

அடுக்களை விதியென்று ஆக்கிய மானிடர்/
அதிசயத்து விழிபிதுங்க அரசாளும் பெண்ணிவள்/
காற்றும் அதிர்ந்திடும் காரிகை வீரத்திலே/
தூற்றும் பகைதனை துணிவோடு வேரறுக்க/

பறக்கின்றாள் புரவியினில் பாவையும் முழக்கத்தோடு/
சிறக்கின்றாள் புவியினில் சிரிக்கின்றாள் தாய்மையுடன்/
கையேந்தும் வாளினில் கைதியாவர் பாவிகளே/
கைப்பற்றும் ஆணவத்தில் கரைந்திடுவார் கலக்கத்துடனே/

வலிமையோடு வலியகற்றும் வல்லமைமிகு பெண்ணாய்/
வம்சம் துளிர்த்திட வழிதனைப் படைப்பாளே/

ஜன்ஸி கபூர்  

நாடோடி வாழ்க்கை

பிறப்பும் இறப்பும் வெட்ட வெளிதனில்/
சனநடமாட்டத் தளங்களே வாழ்க்கைக் கூடங்களாக/
எல்லையின்றிப் பறக்கின்ற சுதந்திரப் பறவைகள்/
நாகரிகம் தொலைத்த பழங்குடிகளே இவர்கள்/

இயற்கைக்குள் இசைந்த வாழ்க்கைப் பயணத்தில்/
இணைக்கிறதே வாழ்வியலும் போராட்டங்களைத் தினமும்/
எளிமையான வாழ்வுதனை எழுதுகின்ற விதியால்/
ஏக்கங்களைச் சுமக்கின்றனர் கனவுகளை உதிர்த்தபடியே/

நானிலத்தின் விரிகோடுகள் இணைக்கின்ற பயணத்திலே/
நாற்புறமும் சொந்தங்கள் உதிர்கின்றனவே வாழ்வியலில்/
கருவோர உயிர்ப்பும் தெருவோரம் உதிப்பதனால்/
வருத்துகின்றதே எதிர்காலமும் சிதைக்கின்றதே எதிர்பார்ப்புக்கள்/

திசையறியாத இறக்கைதனைப் பற்றிடும் நகர்வில்/
வசையும் இசைக்காதே சொத்தில்லா வாழ்க்கைக்கே/
அன்பினைப் பற்றிடும் மானுடச் சிற்பங்களாக/
அகிலத்தில் விதைக்கப்படுகின்றனர் தனிமைதனை இரசித்தபடி/













குடைகளாகும் மரங்கள்தானே  கூடுகளாகிக் காக்குதே/
விடையில்லாத போராட்டங்களே முகவரியாகும் வாழ்க்கையிலே/
கொட்டும் மழைதனில் கரைந்திடாத் தேகமே/
தொட்டுக் கொள்ளுதே கொளுத்தும் வெயிலையும்/

எல்லையும் பிரித்திடாத் தேசத்தில்தானே தினமும்/
எழிலோடு பூக்கின்றோம் பழங்குடி நாமென்றே/
உதிரும் ஏக்கமெல்லாம் பூக்கின்றதே கனவென/
உவகையின்றியே பயணிக்கின்றோம் அவலத்தினை யேந்தியே/

நானிலப் பயணத்திலே தன்மானம் காத்தே/
நற்குடியாகிப் பரவுகின்றோம் சொந்தங்களும் இன்றியே/
தெருவோர வாழ்க்கையும் தொல்லைதானே எமக்கே/
வருந்தினாலும் சிறக்கின்றோமே எதிர்பார்ப்புக்களையும் சுமந்தே/ 

திசையறியாமலே பறந்தே தானே உயிர்க்கின்றோம்/
திரும்பும் இடமெல்லாம் அணைக்குதே இயற்கையும்/
அன்பினை நேசித்தே ஆளுகின்றோம் இதயத்தையே/
அகிலத்திலே விளைகின்றோம் நாடோடி மக்களாகி/

ஜன்ஸி கபூர்
 

வரமென வந்த தேவதைகள்

 

அன்பைக் குலைத்து உயிரில் படர்ந்து/
இன்பத்தின் இதமாக உயிர்த்த மழலையே/
தாய்மைக்குள் உனை இழைத்தே மகிழ்ந்தேன்/
துளிர்த்தாய் நீயென் நிழலுக்குள் அழகாய்/

தவழ்ந்தாய் மடி தந்ததோ மலர்கள்/
தாங்கியதோ தென்றலும் செல்ல நடையினில்/
தங்க விரல்கள் வரைந்திடும் கோலங்கள்/
அங்கத்தில் பதிக்கின்ற அற்புத முத்திரைகள்/
 
யாழும் உன்றன் மொழிக்குள் இசைந்ததோ/
பஞ்சு மேனியும் நிலவுக்குள் ஒளிந்ததோ/
நெஞ்சத் தூளியிலே ஆடிடும் சொர்க்கமே/
கொஞ்சிடும் அன்பினில் சுவைத்தேனே ஆனந்தம்/

உணர்வுக்குள் பூத்திடும் பூ மழையே/
உணர்கின்றேன் உனையே எந்தன் தாய்மைக்குள்/
ஊரார் மலடியெனத் தூற்றாமல் எனக்குள்/
வேரோடினாய் எனைத் தாங்கிடும் விழுதென/

இல்லறச் சோலைக்குள் ஏந்தினேன் பாசத்தில்/
இதயமும் சிரிக்குதே உறவின் பிணைப்பிலே/
வாழ்வின் வரமென வந்த தேவதைகள்/
வம்சத்தின் பெருமைதனை காத்திடும் செல்வங்கள்/

ஜன்ஸி கபூர்  

பொன்னாடு

 


பண்பாட்டின் விழுதுகள் பற்றிடும் நாட்டினில்

எண்ணத்தின்  கலைகளும் இசைந்திடும் வனப்போடு

பண்ணும் பரதமும் அசைத்திடும் மண்ணை

விண்ணும் போற்றிடும் உழவுக்கும் உயிர்கொடுத்தே


ஆய கலைகளும் அரங்கேறிடும் மடிதனில்

தேயாத ஈகையில் விருந்தோம்பலும் உயிர்த்திடுமே

ஓயாத கரகோஷத்தில் சல்லிக்கட்டின் வீரமும்

வாயாரப் புகழுமே பாரம்பரியக் கலைகளும்


ஏட்டறிவின் ஆற்றலும்  வளமாக்குமே வளங்களை 

நட்ட பயிரெல்லாம் சிரித்திடுமே உழவுக்குள் 

வள்ளுவன் குரலாய் ஒலித்திடும் தேனாட்டில்

உள்ளத்தின் உயர்வால் பண்பாடும் வாழ்ந்திடுமே


ஜன்ஸி கபூர்