About Me

2021/04/21

வரமென வந்த தேவதைகள்

 

அன்பைக் குலைத்து உயிரில் படர்ந்து/
இன்பத்தின் இதமாக உயிர்த்த மழலையே/
தாய்மைக்குள் உனை இழைத்தே மகிழ்ந்தேன்/
துளிர்த்தாய் நீயென் நிழலுக்குள் அழகாய்/

தவழ்ந்தாய் மடி தந்ததோ மலர்கள்/
தாங்கியதோ தென்றலும் செல்ல நடையினில்/
தங்க விரல்கள் வரைந்திடும் கோலங்கள்/
அங்கத்தில் பதிக்கின்ற அற்புத முத்திரைகள்/
 
யாழும் உன்றன் மொழிக்குள் இசைந்ததோ/
பஞ்சு மேனியும் நிலவுக்குள் ஒளிந்ததோ/
நெஞ்சத் தூளியிலே ஆடிடும் சொர்க்கமே/
கொஞ்சிடும் அன்பினில் சுவைத்தேனே ஆனந்தம்/

உணர்வுக்குள் பூத்திடும் பூ மழையே/
உணர்கின்றேன் உனையே எந்தன் தாய்மைக்குள்/
ஊரார் மலடியெனத் தூற்றாமல் எனக்குள்/
வேரோடினாய் எனைத் தாங்கிடும் விழுதென/

இல்லறச் சோலைக்குள் ஏந்தினேன் பாசத்தில்/
இதயமும் சிரிக்குதே உறவின் பிணைப்பிலே/
வாழ்வின் வரமென வந்த தேவதைகள்/
வம்சத்தின் பெருமைதனை காத்திடும் செல்வங்கள்/

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!