About Me

2020/07/16

ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்

சிறைக்குள்ளே ஒளியிழந்தாள் சீதையும்- கானகத்
திரைக்குள்ளோ இன்னலுற்றான் இராமனும்
சீதையை விடுவிக்கும் சிந்தையுடன் விபீடணனும்
வதை செய்யும் இராவணனிடம் சொல்லுரைத்தான்

மறுக்காதே யண்ணா பலசாலி இராமனே
அறுத்திட்டான் இரணியனை திருமால் அவதாரமாய்
சீதை விடுவித்தலே நலமெமக்கு  என்றதும்
வெஞ்சினத்தால் விரட்டிவிட்டான் இராவணனு மவனை

இணைந்திட்ட மந்திரி நால்வருடன் விபீடணனும்
இராமன் நிழல் ஒதுங்கினான் அன்புடனே
இராமனின் மனமோ ஐயத்துடன் அலைவுற
இராவணன் சபைக் கூற்றுணர்த்தினான் அனுமானும்

வண்டுகள் மொய்த்திடும் வண்ணமாலை அணிபவனே
வஞ்சக மனமதை மறைத்திடல் சாத்தியமோ
வஞ்சகர் அடைக்கலமாகார் உம் வசமே
நெஞ்சத் தன்புடனே நாம் வந்தோ மென்றதும்

அகம லர்ந்தே அணைத்தான் ராமனும்
முகமதை நோக்கி யுரைத்தான் விபீடணனிடம்
அன்பின் சகோதர்கள் நாங்கள் நால்வராவோம்
பின்னர் குகனோடி ணைந்தே ஐவரானோம்

மேருமலை சுற்றிவரும் சூரியன் மகனாம்
சுக்ரீவன் இணைந்ததும் அறுவரானோம் இப்போ
நீயுமி ணைந்தாய் எழுவரானோம் என்றே அணைக்க
விபீடணனும் மகிழ்ந்தே இராமன் திருவடி தொழுதான்

 Jancy Caffoor




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!