About Me

2021/04/13

மலர்கள் பேசுமா

 

மாலைப் பொழுதின் சோலை வெளிதனில்/

மெல்ல நடக்கின்றேன் சில பொழுதுகளில்/

ஒலி சிந்தாத மௌனத் துடிப்புக்களாக/ 

களிப்பேற்றுகின்றன மலர்கள் மழலை மொழியில்/


மலர்கள் பேசுமா ஆறறிவின் தேடலது/  

நிசப்த வெளிக்குள் ரசிக்கின்றேன் மலர்மொழியை/

வார்த்தைகள் உதிர்க்காத ஒவ்வொரு அசைவும்/

கோர்க்கின்றதே உயிருக்குள் இதமான நேசிப்பை/


சேர்க்கின்றேன் நானும்  செவியைத் திறக்கின்றேன்/

அவை பஞ்சு இதழ்களின் கெஞ்சல்கள்/


நெஞ்சம் ஈர்த்திடும் கொஞ்சும் மொழியினுள்/ 

வஞ்சி என் விழிகளும் மயங்குகின்றனவே/

மௌனச் சந்தம் இசையாக வருடுகின்றதே/

மெல்லிய அசைவும் மொழியாக உயிர்க்கின்றதே/  


தென்றல் விரல்கள் பூமேனியைத் தழுவுகையில்/

வெட்கத்தில் ஒளிகின்ற ஓசையும் இசையே/

சிறகடிக்கும் பூச்சிகளின் அமிர்தக் காதலும்/

உயிர்க்கின்ற பிணைப்பின் ஒலியும் மொழியே/


சூரிய விடியலின் சந்தனக் குளிப்பும்/

உதிர்க்கும் கூதலும் அழகிய மொழியே/

பனித்துளிகள் அணைக்கையில் உணர்ந்திடும் நாணமும்/

இனித்திடும் உணர்வுக்குள் மொழியாகிப் பூக்குமே/


ஜன்ஸி கபூர் - 13.10.20

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!