About Me

2021/04/14

கடும் புனல்

 





 
ஒளி உமிழ்கின்ற ஒற்றை வெண்ணிலாவும்
கொட்டிக் கிடக்கின்ற நட்சத்திரக் கலவைகளும்
தென்றலின் வருடல் விரல்களும் எனக்குள்ளே
தனிமையை விரட்ட சூழ ஆரம்பிக்கின்றன

நள்ளிரவு நிசப்தத்தை கரைக்கின்ற உணர்வினை
மெல்ல அவிழ்க்கின்றது மெல்லிருட்டுக் கரங்கள்.
எட்டிப் பார்க்கின்ற பத்திரப்படுத்தப்பட்ட பசியின்
திணிப்பில் தேகம் திணறிக் கொண்டிருக்கின்றது.

வெறுமையைத் துடைக்கும் கடிகாரத்தின் புறுபுறுப்போடு
தனிமை கொஞ்சம் முரண்பட ஆரம்பிக்கின்றது 
பூமியின் உறக்கத்தில் விழிக்கின்ற துடிப்பில் 
நீள்கின்ற காத்திருப்பின் அலறல் ஆன்மாவுக்குள்

காற்றில் தீயூற்றும் இம்சைக்குள் எதிர்பார்ப்புக்கள்
ஏக்கத்தில் பிசையப்பட்ட மனதோ கசங்குகின்றது
எதிர் சுவற்றில் துணையுடன் பிணைகின்ற
பல்லியின் மோக முணங்கல் நாடியுடைக்கின்றது

எங்கோ நாயின் ஊளைச் சப்தம்
நள்ளிரவின் ஓட்டம் நாடித் துடிப்பினுள்
 
கதவு தட்டப்படுகிறது எதிரே ஆன்மா
நறுமணக் குவியலின் வீரியப் பார்வையில்
நாணம் கசக்கப்படுவது புரிந்தும் ரசிக்கின்றேனதை

உள்ளே மெல்லிய காற்று நுழைந்து
மோகப் பூக்களை பஞ்சணைக்குள் நிறைகின்றது
பசியை அவிழ்ப்பதற்கான அழகிய தருணமிது
இதழோரங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றது இதமான ஈரம்
அன்பின் விரல்கள் பிசைகின்ற ஆசைகளை
பரிமாறுகின்ற மடியும் ஏந்துகின்றது ஏக்கத்தினை

இருள் தன்னை மறைப்பதாக இல்லை
எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது இரகசியங்களை
இழுத்திப் போத்திக் கொண்டிருக்கின்ற ஆன்மாக்களை
இரசிக்கின்றது போலும் சிவக்கின்றது இராப்பசி
மயக்கத்தில் அப்பிக் கொண்ட காதல்
இன்னும் விடுவதாக இல்லை அணைக்கின்றது

விழிக்குள் துயிலினை ஊற்றாமல் துரத்தும்
ஏதோவொன்று என்னைப் பிழிந்தெடுக்க விழுகின்றது
பார்வையும் நிதர்சனத்தில்.....ஓ.......பிரமை

பற்றிக் கொள்கின்ற பனியின் விரல்களை
வேகமாக உதறுகின்றேன் மூச்சுக்குள் அனல்
வெளியே நிலாக்கீற்றின் பிரகாச வளையங்கள்
தவிப்புக்களின் பிழம்புகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன

ஆழ்மனதைப் புரட்டுகின்ற மலையின் ஓசை
இடிக்கின்றது உணர்வுகளை துடிக்கின்றது வலி

ஓவ்வொரு இரவும் விட்டுச் செல்கின்ற
எதிர்பார்ப்பின் வேட்கையில் மனம் தினமும்
புதிதாகவே உயிர்க்கின்றது விடியல் காணாது

மௌனமாக வடிந்தோடுகிறது இரவுத் துளிகள்
எண்ணுவதற்குள் ஒளிப்பிழம்பு தட்டியெழுப்பி
உளத்தில் ஊறும் தணல்பொறியினைச் சீண்டுகின்றது

ஜன்ஸி கபூர் - 17.10.2020'

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!